Latest News

  

தனியார் கல்வி நிலையங்களுக்கு தற்காலிகமாக தடை விதிப்பு

யாழ்ப்பாணம்: தனியார் கல்வி நிலையங்களுக்கு தடை.. வடக்கில் தனியார் கல்வி நிலையங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் விடுத்த கோரிக்கைக்கு அமைய வடக்கு ஆளுநர் P.S.M. சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்குறித்த விடயம் தொடர்பாக வடக்கு ஆளுநருக்கு இன்று (வியாழக்கிழமை) யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து வடக்கில் தனியார் கல்வி நிலையங்களை மூடுவதற்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளார்.

யாழ். மாநகர முதல்வர் அனுப்பிய கடிதத்தில், "உலக அளவில் பாரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து முழு உலகமும் பேசிக்கொண்டிருக்கின்றது.
குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து தமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அந்தந்த அரசுகள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொண்டு வருகின்றமையை அறிவோம். அந்த வகையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக எச்சரிக்கையாக முன்னேற்பாடாக மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அனைத்துப் பாடசாலைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தின் குறித்த அறிவிப்பின் எதிர்பார்ப்பான மாணவர்களைப் பாதுகாக்கும் முன்னேற்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் தனியார் கல்வி நிலைய கற்றல் நடவடிக்கைகளையும் பாடசாலை மீள் ஆரம்பம் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதுதான் பொருத்தமாக அமையும் எனக் கருதுகின்றேன்.

எனவே எதிர்வரும் 13.03.2020 ஆம் திகதி தொடக்கம் 20.04.2020 ஆம் திகதி வரை தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி மாணவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறுஅறிவித்தல் வரும்வரை விடுமுறையளிப்பதாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிப்புடன் இதனை நடைமுறைப்படுத்துமாறும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.