Latest News

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மீண்டும் திமுக கூட்டணி அதிரடி.. மாநிலம் முழுக்க கையெழுத்து இயக்கம்

சென்னை: திமுக கூட்டணி சார்பில் பிப்ரவரி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த விவகாரத்தில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே பேரணி போன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி இன்று ஸ்டாலின் தலைமையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், ஸ்டாலின் கூறியதாவது:

தீர்மானம்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய குடியுரிமை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்பட வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கக்கூடிய எந்த முயற்சியையும் எடுக்கக்கூடாது, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்கிற தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

இதற்காக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்களை சந்தித்து ஒரு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்து உள்ளோம்.
கையெழுத்து இயக்கம்
பிப்ரவரி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கத்தை நடத்தி, கையெழுத்துக்களை முழுமையாக பெற்று, நாட்டின் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த கையெழுத்து இயக்கத்தை ஒவ்வொரு மாநகரம், மாவட்டம், ஒன்றியம், கிளைகளில், ஊராட்சி பகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய எல்லா கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்று இந்த பணியை நிறைவேற்றுவது என்று முடிவு செய்துள்ளோம். கட்சிக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கக் கூடிய, பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் அத்தனை பேரும் ஆதரவு தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அமித் ஷா
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார். அவர் சொல்வதை சொல்லட்டும், நாங்கள் எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்வோம். தீர்வு கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் தான் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம். ஜனாதிபதியை உரிய வகையில் காலஅவகாசம் பெற்று, அவர்களுக்கு உரிய தேதியில் தேவைப்பட்டால் அவரை சந்திப்போம்.
பெரியார் சிலை உடைப்பு
பெரியார் சிலை உடைப்பு கள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இது கண்டிக்கப்பட கூடியது. 95 ஆண்டு காலம் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் குரல் கொடுத்த தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது வெட்கப்பட வேண்டியது. வேதனைப் பட வேண்டியது. இதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும்.
நீட்
தமிழக அரசு இரட்டை வேடத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. சட்டசபையில் இரண்டு முறை மசோதாக்கள் நிறைவேற்ற ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். இப்போது நீதிமன்றம் சென்றுள்ளதாக ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார்கள். இங்கு அடிமைத்தனமான ஆட்சி நடப்பதால், மத்திய அரசு துணிந்து செய்து வருகிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.