
சமாஜ்வாதி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள
நிலையில், அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மேன்புரி தொகுதியில்
போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து, இன்று
சமாஜ்வாடி கட்சி 6 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை
வெளியிட்டது. அதில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ்
பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் மேன்புரி தொகுதியில் போட்டியிடுகின்றார்.
ஏற்கனவே கடந்த தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது
குறிப்பிடத்தக்கது.
மகன் அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி செயல்பட்டு வரும் நிலையில்
அதிருப்தியில் உள்ள முலாயம் சிங்குக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அதற்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக
கூட்டணி 73 இடங்களில் வென்றது. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த
வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்க பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி
கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன.
இதன்படி, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில்
போட்டியிடும் எனவும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும்
காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதாகவும் அக்கட்சிகள் முடிவு செய்தன.
இதையடுத்து காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக
அறிவித்துள்ளது.
ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைக்க
அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்தநிலையில், சமாஜ்வாதி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மேன்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவ் போட்டியிடுவார் என
அறிவிக்கப்பட்டுள்ளது. பத்வான் தொகுதியில் தர்மேந்திர யாதவும்,
பெரோஸோபாத்தில் அக்ஷய் யாதவும் போட்டியிடுகின்றனர். எடாவா தனித் தொகுதியில்
கமலேஷ் கத்ரியாவும், ரோபர்ஸ்கஞ்ச் தொகுதியில் பைலால் கோல், பஹ்ராச்
தொகுதியில் ஷபிர் பல்மிகியும் போட்டியிடுகின்றனர்.

No comments:
Post a Comment