Latest News

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. மாணவர்கள் போராட்டத்தை தடுக்க தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை

                                    * விடுதி மாணவர்களும் வெளியேற்றம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதி மாணவர்களும், கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்ததுடன், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இருப்பினும் அவர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் என பலரை, பாலியலுக்கு உட்படுத்தி மிரட்டியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விடுவிக்க ஆளுங்கட்சி தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர், மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தியதால், இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

பாலியல் சம்பவத்துக்கு எதிராக நேற்று முன்தினம், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே, பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒன்றுசேர்ந்து, பாலியல் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும், அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். ஆனால், போலீசார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க நிர்பந்தப்படுத்தி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு அந்தந்த நிர்வாகத்தினர் கட்டாய விடுமுறை அளித்துள்ளனர்.

இந்நிலையில் பாலியல் குற்ற சம்பவத்துக்கு எதிராக இன்னும் சில நாட்களுக்கு மாணவர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதையறிந்த போலீசார், மீண்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நகரில் ஒருசில கல்லூரிகளை தவிர மீதமுள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, கல்லூரி செயல்பாடு வரும் 18ம் தேதி மீண்டும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில கல்லூரிகளில் விடுதியில் இருந்த மாணவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு திங்கள்கிழமை வருமாறு நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். உடுமலை ரோடு, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் விடுதியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் எந்தநேரத்திலும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று, கோவை ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதி, நகராட்சி அலுவலகம், காந்திசிலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.