ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில்
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள்
அங்கப்பிரதட்சனம் செய்து வழிபட்டனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ
மருத்துவமனையில் கடந்த 14 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண
குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வழிபாடுகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா நலம் பெறவேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்
அதிமுகவினர் யாகம், ஹோம் செய்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். பல
பகுதிகளில் மண் சோறு சாப்பிட்டும், அன்னதானம் செய்தும், பாலபிஷேகம்
செய்தும் வழிபடுகின்றனர்.
அதிமுக மகளிரணி
சென்னை வடபழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உட்பட
50க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கப்பிரதட்சனம் செய்து வழிபட்டனர்.
பயபக்தியுடன் உருள்வலம் வந்த மகளிரணியினர், அம்மா பூரண நலம் பெற்று வீடு
திரும்புவார் என்று நம்பிக்கையுடன் கூறினர். ஏராளமானோர் ஜெயலலிதாவின்
படங்களை கையில் ஏந்திக்கொண்டு சென்றனர்.
சிறப்பு அர்ச்சனை
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள யோகநரசிம்ம பெருமாள் கோயிலில் லலிதா
சகஸ்ரநாம அர்ச்சனையும், அபிஷேகமும் நடைபெற்றன. இதில், சட்டமன்ற
உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீண்ட ஆயுளுக்கு யாகம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பூந்தமல்லி,
கோரிமேடு பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன்
திருக்கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு
சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கழக ஜெ ஜெயலலிதா பேரவை
சார்பில், கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள், நீண்ட
ஆயுளுக்கு யாகங்கள் நடத்தப்பட்டன. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள்
உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.
அன்னதானம்
சேலம் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், சேலம் செவ்வாய்பேட்டையில்
அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் கோயிலில், ஆயிரம் அகல்விளக்கு பூஜை
மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ஏழை-எளிய மற்றும்
பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கழக
நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



No comments:
Post a Comment