உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் செவ்வாய்
கிழமை இரவு பார்க்க வந்துள்ளனர். ஆனால், அவர்கள் ஜெயலலிதாவை
சந்தித்தார்களா? இல்லையா? என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 22ம் தேதி இரவு அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதாவுடன் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி இருக்கும் அவரது
தோழி சசிகலா தற்போது தினமும் இரவு வீட்டுக்கு சென்று ஒரு மணி நேரத்தில்
திரும்புவதாக கூறப்படுகிறது.
ஜெயலலலிதாவை மருத்துவமனையில் சசிகலா மற்றும் அவரது சகோதரர் மனைவி இளவரசி
இருவரும் கவனித்துக் கொள்வதாக செய்தி வெளியானது.
இவர்களைத் தவிர இதுவரை முதல்வரை யாரும் நேரில் பார்த்ததாக உறுதியான
தகவல்கள் வெளியாகவில்லை.
அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தினமும் மாலை நேரத்தில் அறிக்கை வெளியிட்டு
வருகிறது. இதுவரை வெளியான தகவலில் தற்போது உடல் நலமடைந்து வருவதாகவும்,
அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக சமீபத்திய அறிக்கை
கூறுகிறது.
அப்பல்லோவில் சிகிச்சை
முதலில் காய்ச்சலில் துவங்கி தற்போது மூச்சு திணறல், கிருமி தொற்று,
செயற்கை சுவாசம் அவ்வப்போது அவருக்கு அளிக்கப்படுகிறது என்ற தகவலை மருத்துவ
நிர்வாகம் வெளியிட்டுள்ளது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல்
வழிகாட்டுதலின்படி சிகிச்சை தொடர்ந்து நடந்துவருகிறது. அமைச்சர்கள்,
அதிகாரிகள் என யாரையும் அவர்கள் பார்க்க அனுமதிப்பதும் இல்லை. தொற்றுநோய்
வல்லுநர் டாக்டர் ராமசுப்பிரமணியன், ஜெயலலிதாவின் ஆஸ்தான டாக்டர்கள்
சாந்தாராம், பி.சி.ரெட்டி ஆகியோர் தலைமையில் செயல்படும் டாக்டர்கள் குழு
ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்கிறது.
யாருக்கும் அனுமதியில்லை
கடந்த 14 தினங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தாலும், மருத்துவ
குழுவினர், சசிகலா, இளவரசி தவிர வேறு யாரும் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க
அனுமதிக்கப்படவில்லை. சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் வேறு அறைக்குப் போகச்
சொல்லிவிட்டனர். முதல்வரை கவனித்துக்கொள்ளும் பணியாளர்களின் செல்போன்கள்
வாங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு டாக்டர்களின் செல்போன் எண்களையும்
போலீஸ் வாங்கி வைத்திருக்கிறது.
சசிகலா குடும்பம்
இந்நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சசிகலாவின் நெருங்கிய
உறவினர்களான டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், சசிகலாவின்
அண்ணன் மகள் பிரபாவதி, சசிகலா வழக்கறிஞர், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்
ஆகியோர் வந்து சென்றுள்ளனர். ஜெய் ஆனந்த் இரவு 9மணி அளவில் காரில் வெளியே
சென்றுள்ளார். பின்னர் மீண்டும் காரில் மருத்துவமனைக்கு வந்து
சென்றுள்ளார்.
முதல்வரை சந்தித்தார்களா?
இவர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்களா என்பது பற்றி எந்த
தகவலும் வெளியாகவில்லை. அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் 14 நாட்களாக
மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர். இத்தனை நாட்களாக மருத்துவமனை
பக்கமே எட்டிப்பார்க்காத சசிகலா குடும்பத்தினர் திடீரென அப்பல்லோவிற்கு
வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


No comments:
Post a Comment