
மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 18 -ம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையை விவசாய சங்கங்கள் சார்பில் முற்றுகையிடப்போவதாக பிஆர் பாண்டியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லி மாநகரம் பல கோடி விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். கோரிக்கையை ஏற்று சட்டத்தை திரும்பப் பெற வேண்டிய மத்திய அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லி அவதூறு பிரச்சாரங்கள் செய்து விவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விவசாயிகள் போர்வையில் போராட்டக்களத்தில் நக்சலைட்களும், தீவிரவாதிகளும் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என்று அப்பட்டமான பொய்யை தெரிவித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை அவர் திரும்ப பெற வேண்டும்.
நியாயமான கோரிக்கையை ஏற்று சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு பிரதமர் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கிறது. போராட்டக்குழு அறைகூவலுக்கு இணங்க தமிழ்நாட்டிலும் சுங்கச்சாவடிகளை தடுத்து நிறுத்துவது, ரயில் நிலையங்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாங்கள் எச்சரிக்கிறோம்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும், வரும் டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு இதனை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டம் காரணமாக, ஆளுநர் மாளிகை, மத்திய அரசு அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment