Latest News

சாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு வர முடியாமல் செய்துள்ளோம்: அரவிந்த் கேஜ்ரிவால்

சாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு வர முடியாமல் செய்துள்ளோம்: அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தங்கள் ஆட்சி அரசியல் சொல்லாடலை மாற்றியதில் நல்ல பங்கு வகித்துள்ளதாக தெரிவித்தார். 

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

மக்களுடன் பணியாற்றவும் நாட்டில் நிலவும் அரசியல் சொல்லாடல் களனை மாற்றவுமே அரசியலுக்கு வந்தோம். இந்த 5 ஆண்டுகளில் 3 விஷயங்களைச் செய்துள்ளோம். 

ஒன்று, அரசை நேர்மையாக வழிநடத்த முடியும் என்பது. 

இரண்டு, தேர்தலையும் நேர்மையாகச் சந்திக்க முடியும் என்பது
மூன்றாவது, மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். 

கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத மாற்றத்தை எங்களால் கொண்டு வர முடிந்தது. எந்த ஒரு முந்தைய அரசும் பள்ளிகள், மருத்துவமனைகள் நிலையை மேம்படுத்தியதில்லை. 

எந்த ஒரு முந்தைய அரசும் மின்சாரத்தை மலிவாக்கி, 24 மணி நேர மின் விநியோகத்தை உறுதி செய்ததில்லை. ஒன்று இதை எப்படி செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை அல்லது செய்வதற்கான நோக்கம் இல்லை. நாட்டை பிற்போக்கிலேயே, ஏழ்மையிலேயே, கல்வியறிவின்மையிலேயே வைத்திருப்பது அவர்களுக்கு பொருந்தி வருகிறது. 

மேலும் நாங்கள் அரசியல் சொல்லாடலை மாற்றியுள்ளோம். ஹரியாணாவில் பாஜக ஜாட்/ஜாட் அல்லாதார் என்பதைக் கொண்டு பாஜக காய் நகர்த்தியது, அதே போல் மகாராஷ்ட்ராவில் மராத்தியர்கள்- மராத்தி அல்லாதவர்கள், குஜராத்தில் படேல், படேல் அல்லாதவர்கள், மற்ற இடங்களில் இந்து/முஸ்லிம் அரசியல் என்றே பாஜக செயல் படுகிறது. 

ஆனால் இத்தகைய பாஜகவை தற்போது மின்சாரம், குடிநீர், அதிகாரப்பூர்வமற்ற காலனிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என்று பேச வைத்துள்ளோம். நாங்கள் என்ன பணியாற்றினோம் என்பதைத்தான் மக்கள் பார்க்கின்றனர். தேர்தல் கள சொல்லாடல் ஆட்சியின் பயன்கள் குறித்து திரும்பியுள்ளது. நாங்கள் செய்த நல்லது பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆகவே பாஜகவுக்கு வேறு பிரச்சார மாதிரி கிடையாது அடிப்படைத் தேவைகளை பேசியாக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். 

இன்னமும் சாதியையும் மதத்தையும் அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் ஒருநாட்டில் நாங்கள் மிகப்பெரிய சொல்லாடல் மாற்றத்தினை கொண்டு வந்துள்ளோம். நாட்டில் முதல் முறையாக வளர்ச்சி என்பது முக்கியத்துவம் பெறுகிறது, என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.