
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும், 30ம் தேதிகளில் இரு
கட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல்
ஆணையம் இன்று புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம்
தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 6ம் தேதியான நேற்று முதல் வேட்புமனு
தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27ம் தேதியும்,
2ம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு சில மாதங்கள் கழித்து
தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
புதிதாக
பிரிக்கப்பட்ட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு,
திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பணிகள்
நடைபெறாததால் பிரிக்கப்படாத பழைய மாவட்டத்தின் அடிப்படையில் மாவட்ட
பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதை
எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்திருந்தனர். அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய
வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு பணிகள்
முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும்
கூறப்பட்டு இருந்தது.
அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நேற்று
விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டது. அதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன்
அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9
மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உடனே தேர்தல் நடத்தப்படும் என்றும்
கூறப்பட்டது.
இதற்காக பழைய தேர்தல் அட்டவணையை ரத்து செய்வதாகவும்,
புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளதாகவும் கோர்ட்டில் தேர்தல் ஆணையம்
சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று நடைபெற இருந்த வேட்புமனு
தாக்கல் நடைபெறவில்லை. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். எனவே, இன்று மாலை
4.30 மணிக்கு புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணையர், பழனிச்சாமி கூறியதாவது:
* டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
*காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 5 மணியுடன் நிறைவடையும்
*ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்
* நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் தேர்தல் நடக்கும்

No comments:
Post a Comment