'கிறிஸ்துவ நிறுவனங்கள், பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதாக, பொதுவான கருத்து நிலவுகிறது' எனத் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதியரசர், அந்தக் கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

சென்னை எம்.சி.சி கல்லூரியின் விலங்கியல்துறை மாணவிகள், ஜனவரி மாதம் கர்நாடகாவுக்குக் கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, உடன் வந்த இரண்டு பேராசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை திரும்பிய மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விளக்கமளிக்குமாறு கல்லூரி நிர்வாகம் அந்தப் பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், தங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, சாமுவேல் டென்னிசன் என்ற பேராசிரியர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். `34 மாணவிகள் அளித்த புகாரின் பெயரிலேயே, இந்த நடவடிக்கையை கல்லூரி நிர்வாகத்தினால் எடுக்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை' எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதேசமயம், சுற்றுலாவில் மாணவிகளுக்குத் துணையாக இரண்டே இரண்டு பெண் ஆசிரியர்களையும் ஐந்து ஆண் ஆசிரியர்களையும் உடன் அனுப்பியது தவறு என்றும் கல்லூரி நிர்வாகத்துக்குச் சுட்டிக்காட்டினார். மேலும், கல்லூரி நடத்திய விசாரணையில் நேரில் சாட்சி கூறிய மாணவிக்கு முறையாக கவுன்சலிங் கொடுக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வாசித்த பின் மேலும் சில கூடுதலான கருத்துகளை நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. அவர் தனது தீர்ப்பில், " இந்தத் தீர்ப்பு முடிவுபெறுவதற்கு முன்னர், இன்னொன்றும் சொல்ல வேண்டியது அவசியமெனக் கருதுகிறேன். இன்றைய காலகட்டத்தில், கிறிஸ்துவ நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்றன. இந்த நிறுவனங்கள், கட்டாய மத மாற்றுதலில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார்களைச் சந்திக்கின்றன. மத நம்பிக்கைகள் என்பவை கோயிலைத் தாண்டி, தெருக்களுக்கு வரும்வரை இத்தகைய அவலநிலை தொடரும். அதேபோல கிறிஸ்துவ நிறுவனங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதாக, பெற்றோர்கள் மத்தியில் பொதுவான கருத்து நிலவுகிறது" என்று கூறினார்.
மேலும், `` பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், ஆண்களைப் பழிவாங்கும் நோக்கில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இதைத் தடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவர இதுவே சரியான தருணம்" என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்தக் கருத்துக்கு, பெண்கள் அமைப்புகள் சார்பிலும் கிறிஸ்துவ நிறுவனங்கள் சார்பிலும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், நீதிபதி வைத்தியநாதன் தன்னுடைய கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.


No comments:
Post a Comment