'குஜராத் மாதிரி' வளர்ச்சித் திட்டமே போலியானது, அர்த்தமற்றது என
காங்கிரஸ் கட்சிக்கும் இந்திரா காந்தி குடும்பத்துக்கும் நெருக்கமானவருமான
சாம் பித்ரோடா கூறுகிறார்.
"வளர்ச்சி யாருக்கு? மொத்த உள்நாட்டு
உற்பத்தி என்று ஏமாறாதீர்கள். சலுகைகள் கொடுத்து ஐந்து பெரிய தொழில்களை
தொடங்கி விட்டால் அது வளர்ச்சியாகாது. அனைத்து தரப்பு மக்களையும் வந்தடையாத
வளர்ச்சியால் என்ன பயன்?" என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அவரது பேட்டியில் இருந்து சில கேள்வி பதில்கள்..
குஜராத் மக்களுடனான சந்திப்பின்போது நீங்கள் அறிந்துகொண்ட பிரதான பிரச்சினை என்ன?
உண்மையைச்
சொல்ல வேண்டுமானால், குஜராத்தில் நான் நிறைய அதிர்ச்சியான கதைகளைக் கேட்க
நேர்ந்தது. அங்கு முறைசாரா தொழில்கள் முற்றிலுமாகவே
புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது எவ்வித
கவனமும் இல்லை. அவர்களுக்காக எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லை.
அங்குள்ளவர்கள் ஏதாவது தகவல் வேண்டி தகவலறியும் சட்டத்தின் கீழ்
விண்ணப்பித்தாலே போதும் உடனடியாக அடக்குமுறைகள் ஆரம்பித்துவிடும். 30, 40
ஆண்டுகளுக்கு முன் அரசு தானமாக வழங்கிய நிலங்களை தற்போது அரசாங்கமே
ஆக்கிரமிக்கிறது என மக்கள் குமுறுகின்றனர். கேட்டால், தொழில் வளர்ச்சி
என்கின்றனராம். இத்தகைய பிரச்சினைகளைத்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில்
இடம்பெறச் செய்யவுள்ளோம்.
பாஜக நாடு முழுவதும் பிரகடனப்படுத்தும் 'குஜராத் மாதிரி' வளர்ச்சித் திட்டம் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
'குஜராத்
மாதிரி' வளர்ச்சித் திட்டமே போலியானது, அர்த்தமற்றது. வளர்ச்சி என்பது
கீழிருந்து மேல்நோக்கி இருக்க வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.
இதுதான் காந்திய வழியிலான வளர்ச்சியும்கூட. இதுவே காங்கிரஸ் கட்சியின்
அணுகுமுறையாகும். இத்தகைய வளர்ச்சியே குஜராத்தில் மட்டுமல்ல நாடுமுழுவதுமே
அமல்படுத்தப்படும்.
ஆனால், பொருளாதார நிபுணர்கள் சிலர் குஜராத் மாதிரி திட்டத்தை புகழ்ந்து பாராட்டுகின்றனரே?
வளர்ச்சியா?
யாருக்கு அது சாதகமாக இருக்கிறது? ஏதோ சில சலுகைகள் கொடுத்து ஐந்து பெரிய
தொழில்களை தொடங்கி விட்டால்; ஐந்து பெரிய பணக்காரர்களை உருவாக்கிவிட்டால்
அது வளர்ச்சியாகிவிடுமா? அவை புள்ளிவிவரங்களாக வேண்டுமானால் பளபளக்கும்.
வளர்ச்சிக்கான புள்ளிவிபரங்கள் கிடைத்துவிடும். ஆனால், அனைத்து தரப்பு
மக்களையும் வந்தடையாத வளர்ச்சியால் என்ன பயன்? மக்களின் தேவைகளை நீங்கள்
பூர்த்தி செய்தீர்களா? மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று ஏமாறாதீர்கள்.
குஜராத்
மாதிரி வளர்ச்சித் திட்டத்தால் சில கோடீஸ்வரர்களும் பல லட்சாதிபதிகளும்
உருவாக்கப்பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலானோர் வறுமைக்கு
தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் வளர்ச்சியா? இந்த வளர்ச்சியைத்தான் நாம்
விரும்புகிறோமா? 70 ஆண்டுகளில் இந்நாட்டில் எதுவுமே நடக்கவில்லை எனக்
கூறுவது எனக்கு வெறுப்பைத் தருகிறது.
அதை சொன்னது நமது பிரதமர்தானே..
யார்
எதை சொல்கிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை. சில வேளைகளில்
உங்கள் பொய்கள் விற்பனையாகலாம். ஆனால், எங்களைப் போன்றோரை இழிவு
படுத்தாதீர்கள். நாங்கள் தேசத்துக்காக உழைத்தவர்கள். பால் உற்பத்தியில்
இந்த தேசத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியவர் டாக்டர் குரியன். எத்தனையோ
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் செயற்கைக்கோள்களை அனுப்பி நம்மை
பெருமைப்படுத்தியுள்ளனர். ஐஐடி.,க்கள் சிறந்த அறிஞர்களைத் தந்திருக்கிறது.
எனவே, எதுவுமே நடக்கவில்லை என இழிவுபடுத்தாதீர்கள். தாழ்வு மனப்பான்மை
கொண்டவர்கள் மட்டும்தான் இந்த தேசம் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகே
மிளிர்கிறது எனக் கூறுவர்.
ராகுல் காந்திக்கு புது அடையாளம் கொடுக்க காங்கிரஸ் முயன்று வருகிறதா?
அது
உண்மையல்ல. ராகுலுக்கு நாங்கள் எவ்வித புதிய அடையாளத்தையும் ஏற்படுத்த
முயற்சிக்கவில்லை. சில கோமாளிகள் அவரை 'பப்பு' என அழைக்கின்றனர். ஆனால்,
அவர் அத்தகையானவர் அல்ல. அவர் கற்றறிந்தவர்; நேர்மையானவர். தியானம்
செய்பவர். நிறைய சிந்திப்பவர். சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகவே அவர்
சிந்திக்கிறார். அவர் ஒரு சான்றோர். அதற்கு ஒரு சான்று சொல்கிறேன்.
அண்மையில் அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது 90 நிமிடங்கள் முஸ்லிம் அறிஞர்
ஒருவருடன் ஆலோசித்தார். பின்னர், சீனா மற்றும் வட கொரிய விவகாரங்களில்
நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசித்தார். அவர் ஒரு நாகரிகமான மனிதர்.
தன்னை நம்பியவர்களை ஏமாற்றமாட்டார்.
இவ்வாறு சாம் பித்ரோடா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment