தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதில்
பாஜக மூத்த தலைவர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர் என்று காங்கிரஸ் கட்சியின்
உத்தரப் பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளர் பிரியங்கா
குற்றம்சாட்டினார். அவ்வாறு பாரபட்சம் காட்டக் கூடாது என்றும்
வலியுறுத்தினார்.
காங்கிரஸ் வேட்பாளர் ராகேஷ் சச்சானுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச மாநிலம், ஃபதேபூர் நகரில் சனிக்கிழமை பிரியங்கா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தேசப்பக்தி விவகாரம் ஒவ்வொரு தேர்தலின்போதும் பெரிதாக்கப்படுகிறது. விவசாயம், வேலையின்மை, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. வெளிநாடுகளில் வங்கிக் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்து அதை தேசப்பற்றுடன் பாஜகவினர் தொடர்புப்படுத்திக் கொள்கின்றனர். யாராவது தேசப்பற்று இல்லாமல் உள்ளார்களா? அனைவருக்கும் தேசப்பற்று உண்டு. தேசப்பற்று என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, தங்களுக்கு இருக்கும் வாக்குரிமையை ஆயுதமாக பயன்படுத்துவதே ஆகும். விழிப்புடன் இருப்பதே தேசப்பற்று. முஸ்லிம், ஹிந்து என்று பாராமல் அனைத்து தியாகிகளையும் சமமாக கருத வேண்டும். குறிப்பிட்ட தலைவர்களை மட்டும் தேர்வு செய்து மரியாதை செய்யக் கூடாது. பாஜகவினர் தேசப்பற்று கொண்டவர்கள் என்பது உண்மையென்றால், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:
Post a Comment