
திருநாவுக்கரசர், ரஜினி, ஸ்டாலின், சரத்குமார் என்றெல்லாம் போய்
கடைசியில் துணை முதல்வரே விஜயகாந்த் வீட்டுக்கு போக போய் விட்டார்.
அதிமுகவினர் ஷாக்காகிக் கிடக்கின்றனர்.
தொடர்ந்து கூட்டணி இழுபறியில் உள்ளது தேமுதிக. தனித்தனியாக ஒவ்வொரு கட்சி
சார்பில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தும்கூட ஒன்றும்
மசியவில்லை என்றே தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்பு பரபரப்பாக தேமுதிகவுடன் கூட்டணி விஷயத்தில்
இறங்கிய அதிமுக நாளடைவில் அந்த விஷயத்தை ஆற போட்டுவிட்டது.
பேச்சுவார்த்தை
இதற்கு காரணம் எப்படி இருந்தாலும் நம்ம கிட்டதேமுதிக வந்துதான் ஆக வேண்டும்
என்ற அலட்சியம்தான். ஆனால் அதிமுக இப்படி நினைக்க, தேமுதிகவோ வேறு தினுசாக
யோசிக்க ஆரம்பித்தது. அதிமுகவுடன் உறவில் இருந்து கொண்டே திமுக, கமல்,
டிடிவி தினகரன் என ரவுண்டு கட்டி பேச்சுவார்த்தை நடத்தியது. இதை
பார்த்ததும் அடிவயிற்றில் அள்ளு கிளம்பியது பாஜகவுக்குதான்.

முதல் கண்டிஷன்
முதல் காரணம், திமுக பக்கம் தேமுதிக சாய்ந்துவிட்டால், கண்டிப்பாக
ஓட்டுக்கள் பிரியும் என்று கணக்கு போட்டது. இதே நிலைமைதான் விஜயகாந்த்
தினகரன் பக்கம், கமல் பக்கம் போனாலும் நடக்கும் என்பதால், தேமுதிகவை
எப்படியும் விட்டுவிடக்கூடாது என்ற கண்டிஷனை அதிமுகவுக்கு போட்டுவிட்டது
பாஜக தலைமை.
உயர்நிலை குழு கூட்டம்
இரண்டாவது காரணம், நாளை தேமுதிக உயர்நிலைக்குழு கூட்டம் கூட உள்ளது. இதில்
ஏடாகூடமான முடிவை எடுத்துவிட்டால் அது அதிமுகவுக்கு பாதகமாக போய்விடும்
என்றும் நினைக்கிறது. மூன்றாவதாக, வரும் 6-ம் தேதி, பிரதமர் மோடி
தலைமையில், சென்னையில், நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின்
தலைவர்களை மேடை ஏற்ற வேண்டிய நெருக்கடியில் அதிமுக உள்ளது.
விறுவிறு கூட்டணி
இது எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்டாலின் விறுவிறுவென கூட்டணி விவகாரங்களை
முடித்து கொண்டு வருகிறார். எனவே மேலிட சப்போர்ட்டை எக்கச்சக்கமாக வைத்து
தேமுதிக தண்ணி காட்டி வருவதால், அதிமுக மண்டை காய்ந்து கிடக்கிறது. அதனால்
யாரை அனுப்பியும் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்து துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வமே விஜயகாந்த் வீட்டுக்கு போய் விட்டார். அங்கு கூட்டணி
சம்பந்தமான இறுதியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
கட்டுக்கோப்பில் கட்சி
ஓஹோவென அன்று தேமுதிக வளர்ந்து தழைத்தோங்கிய காலத்திலேயே விஜயகாந்த்தை தன்
வீடு தேடி வரச் செய்தவர் ஜெயலலிதா. யாராக இருந்தாலும் தான் இருக்கும்
இடத்துக்கு வரவழைத்து கூட்டணி பேசுவதுதான் ஜெயலலிதா பாணி, அதிமுகவின்
ஸ்டைலும் கூட. அன்று விஜயகாந்த்தையும் அப்படித்தான் கூப்பிட்டு பேசினார்.
அப்படி ஒரு கட்டுக்கோப்பில், ஒரு கெத்தாக தூக்கி நிறுத்தி, தேடி வரும்
அளவுக்குதான் கட்சியை வைத்திருந்தார் ஜெயலலிதா.
ஜெ.க்கு இழுக்கு
ஆனால் இன்றைக்கு பலமிழந்த, தேய்ந்து போன ஒரு கட்சியை தேடி அதிமுக ஓடுவது
தமிழகத்துக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் உள்ளது. இதனால் தேமுதிக பலம்
வாய்ந்த கட்சி என்பது அர்த்தம் ஆகாது... அதிமுக தேய்ந்துபோய் வருகிறது
என்றுதான் அர்த்தம் ஆகிறது. எங்கே ஓட்டை விஜயகாந்த் பிரித்துவிடுவாரோ என்று
நினைத்து கொண்டு ஓபிஎஸ் விஜயகாந்த் வீட்டுக்கு ஓடுவது அதிமுகவின் பலவீனம்
மட்டுமல்ல.. ஜெயலலிதாவுக்கே இழுக்கு ஆகும்!
No comments:
Post a Comment