
உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு
அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக
உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜேம்ஸ்
வசந்தன், காவிரி பிரச்சனை சர்வதேச கவனத்தை பெற கிரிக்கெட் ஆட்டத்தை நாம்
தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல
வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக
இருக்கலாம்.
சிந்தித்து தீர்மானியுங்கள். April 10-ம் தேதி CSK-வின் முதல் match.
50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால்
சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில்
காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில்
எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் - ஒரு சின்ன தியாகத்தால், சென்று
சேர்ந்துவிடும். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை
திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல்
சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன)
திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப்
பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப்
போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது. நாம்தான் இதைக்
கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண நிந்திக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு முன்மாதிரி! உத்வேகம்! இந்த ஒரே ஒரு
போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை
வலுப்படுத்துவோம் என்றுதான் ஆலோசனை சொல்கிறேன். இது ஏதோ விவசாயிகளின்
பிரச்சனை என நினைத்துவிடவேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை.
உணவு உற்பத்தியைப் பாதிக்கிறப் பிரச்சனை. அரிசி சாதத்தை நம்பி வாழ்ந்து
கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை! இது தமிழர்களின் பிரச்சனை
என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப்
புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது
மொழிப்பிரச்சனை அல்ல.. வாழ்வுப் பிரச்சனை! உங்கள் உணவையும் சேர்த்துத்
தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை! போதிய நீர் இல்லாமல் இது
உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த
பொருளாதாரத்தையும் பாதிக்கும்.. உங்கள் தொழில்கள் உட்பட! அந்த ஒரு நாள்
ஸ்டேடியத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து
பாருங்கள். ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்த தியாகம். ஆனால் 7 கோடி
பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். இதனால் மற்ற யாருக்கும் எந்தத்
தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர
வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்த பாதிப்போ, தொலைக்காட்சி
வருமானத்திற்கோ, CSK-க்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார
ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின்,
உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம். என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment