
சுவிஸ் வங்கியில் இருந்து எடுத்து வருவதாக சொல்லி, தாய்மார்களின்
சுருக்குப்பைகளில் இருந்த பணத்தை எடுத்துச் சென்ற அரசு இனியும் தேவைதானா
என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்று ஆர்.கே நகர் பிரச்சாரத்தில்
திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க
சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மருதுகணேஷுக்கு காங்கிரஸ்,
விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி
ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
ஆர்.கே நகரில் தற்போது தி.மு.க ஆதரவு கட்சித்தலைவர்கள் கலந்து
கொள்ளும் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், வைகோ,
திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன், ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன்
உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், இந்தியாவில்
மதவாத சக்திகளை விரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்காகத் தான்
மத்தியில் ராகுல் காந்தியும், தமிழகத்தில் ஸ்டாலினும் தயாராகி
வருகிறார்கள். அதற்காக உருவாகி உள்ள மாபெரும் கூட்டணியின் முதல்
வெற்றிக்கான அஸ்திவாரம் தான் ஆர்.கே நகர் தேர்தல் என்று குறிப்பிட்டார்.
மேலும், இத்தனை நாள் இந்த அமைச்சர்களை ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு
உள்ளேயும், வெளியேயும் ஏன் பேசாமல் வைத்திருந்தார் என்பது இப்போது தான்
தெரிகிறது. கன்னியாகுமரியில் ஏற்பட்டு இருக்கும் துன்ப சம்பவத்திற்கு
துரும்பளவு கூட எந்த உதவியையும் செய்யாமல் இருக்கும் முதல்வரும், சுவிஸ்
வங்கியில் இருந்து பணம் வரும் என்று சொல்லி சுருக்குப்பைகளில் இருந்து
பணத்தை உருவிக்கொண்டிருக்கும் மத்திய அரசும் இனியும் தேவைதானா என்று மக்கள்
முடிவு செய்வார்கள்.
மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகி சென்று இருக்கும் இந்த அரசை விரைவில்
மக்கள் விலக்கி வைப்பார்கள். அது இந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மூலம்
நடக்கும். விரைவில் இந்த கூட்டணியில் சி.பி.எம் கட்சியும் இணையும் என்றும்
திருநாவுக்கரசர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment