தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பதற்காக
சிங்கப்பூரில் இருந்து இரண்டு நிபுணர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வர
உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர்
ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களும் நிபுணர்கள்
குழுவில் உள்ள பிற மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளித்து
வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேவையான சுவாச உதவி, நோய் எதிர்ப்பு ஆன்ட்டி
பயாடிக் சிகிச்சை, ஊட்டச்சத்து மற்றும் பிற ஆதரவுச் சிகிச்சைகள் உட்பட
பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்று அக்டோபர் 10ம் தேதி
அப்பல்லோவின் அறிக்கை வெளியானது. அதன்பிறகு இதுவரை எந்த அறிக்கையும்
வெளியாகவில்லை.
தொடர் கண்காணிப்பு
நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள், இதயச் சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருத்துவ
நிபுணர்கள், செயற்கை சுவாச சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நோய்த் தொற்று
சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையை
கண்காணித்து வருகிறார்கள். இதன் காரணமாக அவரது உடல் நிலையில் திருப்திகரமான
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர்கள் ஆலோசனை
லண்டன் டாக்டர் ரிச்சர்டு நேற்று மீண்டும் வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு
சிகிச்சையைத் தொடங்கியுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுடன் இணைந்து
இதுவரை முதல்வருக்கு ஜெயலலிதாவுக்கு அளிக்கப் பட்டுள்ள சிகிச்சை முறைகளை
ஆய்வு செய்தார். அடுத்தக்கட்டமாக ஜெயலலிதாவுக்கு எத்தகைய சிகிச்சை முறைகளை
மேற்கொள்வது என்பது பற்றியும் விவாதித்தனர்.
அடுத்த கட்ட சிகிச்சை
3 மணிநேரம் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த பரிசோதனையின் அடிப்படையில்
சிகிச்சைகளை தொடங்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக ஜெயலலிதாவுக்கு மீண்டும் பிசியோ தெரபி சிகிச்சை அளிக்க
மருத்துவக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சிங்கப்பூர் மருத்துவர்கள்
சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிசியோ தெரபி பயிற்சி அளிப்பதில்
உலக அளவில் சிறப்புப் பெற்ற மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் மூலம்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க நேற்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அந்த மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்பு
கொண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் பேசியுள்ளனர்.
பிசியோ தெரபி
சென்னை மருத்துவர்களின் அழைப்பை சிங்கப்பூர் பிசியோதெரபி பயிற்சி
நிபுணர்கள் ஏற்றுக் கொண்டு ஞாயிற்றுக் கிழமையன்று அவர்கள் சிங்கப்பூரில்
இருந்து புறப்பட்டு சென்னை வர உள்ளனர். இரண்டு பிசியோ தெரபி நிபுணர்கள்
சென்னைக்கு வந்து ஜெயலலிதாவிற்கு பயிற்சி அளிப்பார்கள் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தொடரும் பிரார்த்தனைகள்
சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் அளிக்கும் பயிற்சிக்குப் பிறகு
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் மேலும் விரைவான முன்னேற்றத்தை எட்டும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவதற்காக
மருத்துவமனை வாசலில் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள்,
பூஜைகள் செய்து வருகிறார்கள். தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலையில்
முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால் தொண்டர்கள் உற்சாகம்
அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment