Latest News

தமிழக போலீசாருக்கு சங்கம் அமைக்க அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்


 போலீசாருக்கு நலச் சங்கம் அமைக்க அனுமதி வழங்க கோரி செந்தில்குமார் என்ற போலீஸ்காரர் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மதுரை திருமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற போலீஸ்காரர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம், தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் உரிமைகளை பெற கடந்த 2001ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை காவலர் நலச் சங்கம் உருவாக்கப்பட்டது. போலீஸ் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழக உள்துறை செயலாளர், டிஜிபிக்கு மனு கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை டிஜிபி பரிசீலித்து, ஒரு மாதத்தில் முடிவெடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.

ஆனால், டிஜிபி இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. எனவே உடனடியாக எங்களின் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் டிஜிபி தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மனு தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டது.

போலீசாருக்கு தேவைப்படும் வசதிகளை அரசே செய்து கொடுத்து வருகிறது, அவர்கள் குறைகளை அவ்வப்போது அரசே களைந்து வருகிறது. எனவே போலீசாருக்கு சங்கம் தேவையில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பிலுள்ள காவல்துறை சங்கம் ஆரம்பித்து, வேலை நிறுத்தம் செய்ய தொடங்கினால் மாநிலத்தில் அமைதி பாதிக்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்தது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட ஹைகோர்ட், சங்கம் அமைக்க கோரிக்கைவிடுத்த மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.