Latest News

டாக்டர்கள் மருத்துவமனைக்கு சரியாக வருகிறார்களா? வாட்ஸ்அப்பில் கண்காணிக்கும் சென்னை மாநகராட்சி


சென்னையில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் போன்ற ஊழியர்கள் உரிய நேரத்திற்கு வந்து, உரிய நேரத்தில் செல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க வாட்ஸ்அப் மூலம் கண்காணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் மொத்தம் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. தினமும் சராசரியாக ஒவ்வொரு சுகாதார நிலையத்திலும் சுமார் 150 நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். காலை 8 மணி முதல் மதியம் 3 மணிவரை, இம்மருத்துவமனைகளின் பணி நேரமாகும்.

ஆனால், டாக்டர்கள், நர்சுகள், லேப்-டெக்னிஷியன்கள் உரிய நேரத்திற்கு வராமலும், விரைவிலேயே கிளம்பிவிடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதை கட்டுப்படுத்துவதற்காக, மாநகராட்சியின் சுகாதாரத்துறை வாட்ஸ்அப் உதவியை நாடியுள்ளது. சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும், தினமும், நேரம் குறிப்பிடாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் விசிட் அடிக்க வேண்டும் என்றும், பணியிலுள்ள ஊழியர்களை போட்டோ எடுத்து, இதற்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குரூப்பில் போட்டோவை அப்லோடு செய்ய வேண்டும் என்றும், சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. காலை 8 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ஒரு பிரிவு அதிகாரிகளும், அதேபோல மதியம் 3 மணியளவில் ஒரு பிரிவு அதிகாரிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் திடீர் விசிட் அடித்து செல்போனில் போட்டோ எடுக்க தொடங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால், மருத்துவ பணியாளர்கள் உரிய நேரத்திற்கு மருத்துவமனை வரத்தொடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.