Latest News

அரசு பள்ளிகளில் எழுத்தர் பணிக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணி அமர்த்தலாம்


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கு, ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு எழுத்தர்களை ஓராண்டுக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தலாம் என்று மாநில கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மாநில அரசின் கீழ் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளதாகவும், அந்த பணிகளை கூடுதலாக ஆசிரியர்களே கவனிக்கும் நெருக்கடியும் இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக அரசு பள்ளிகளில் எழுத்தர் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, கூடுதல் ஊழியர்களை நியமிக்கும் வகையில் பள்ளிகளில் தனி கமிட்டி அமைக்க வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கான முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் எழுத்தர்களாகவும், எஸ்டேட் மேலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை, பள்ளிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யலாம் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய, மாநில அரசுகள், பிற மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், பாதுகாப்பு துறைகளில் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், பள்ளிகளில் எழுத்தர் பணியாற்ற விண்ணப்பம் செய்யலாம். ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு மட்டும் இப்பணிக்கு ஆள்தேர்வு நடைபெறும். எஸ்டேட் மேலாளராக பணியாற்றியவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பணியாற்றும் எழுத்தர்களின் எண்ணிக்கை 2க்கு மிகாமலும், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் வேலை செய்யும் எழுத்தரின் எண்ணிக்கை 3க்கு அதிகமாக இல்லாமலும் இருத்தல் வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் எழுத்தர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். மாத ஊதியமாக ₹25,000 வழங்க வேண்டும். ஆனாலும் அவர்களுக்கு பிற சலுகைகள் வழங்கப்படாது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் எழுத்தர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். அல்லது காலிப்பணிக்கான இடத்தில் நிரந்தர ஊழியர் நியமிக்கப்படும் வரை ஒப்பந்த ஊழியர் பணியாற்றலாம். இல்லையெனில், 65 வயதை எட்டும் வரை ஒப்பந்த ஊழியர் பணியாற்றலாம். ஒருவேளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர் சிறப்பாக பணியாற்றி இருந்தால், அவரது பணிக்காலத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.