கடலுார்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளியூரிலிருந்து கொண்டு வரப்படும் நிவாரணங்களை, உள்ளூரில் உள்ள சில சமூக விரோதிகள் தடுத்து எடுத்துச் செல்வதாக கடலூரில் மாவட்டத்தில் புகார் எழுந்துள்ளது
தமிழகத்தில் பெய்துவரும் கனமழையில் சென்னைக்கு ஈடாக பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர். அங்கு அரசுடன் இணைந்து தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றனர். தமிழகத்தின் அத்தனை இடங்களிலிருந்தும் சென்னை மற்றும் கடலூ ருக்கு பல தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த நிவாரணப்பொருட்கள் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை பெரிய பெரிய வாகனங்களில் தினம் தினம் அனுப்பி வருகின்றனர்.
அப்படி வரும் வாகனங்களை கடலூருக்கு முன்னதாகவே குழுமியிருக்கும் சில சமூக விரோதிகள் வழிமறித்து அதை தங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்வதாக புகார் கூறுகின்றனர்.
வாகனத்தில் வரும் தன்னார்வலர்கள் இதனால் அதிர்ச்சியாகி என்னசெய்வதென்று புரியாமல் அவர்கள் சொல்லும் இடத்திற்கு செல்கின்றனர். பெரும்பாலும் இந்த கும்பல் அதிகளவு பாதிக்கப்படாத நிலையிலும் தங்கள் அராஜகத்தினால் நிவாரணப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களை அந்தந்த ஊர்களில் வழிமறித்து திசை திருப்பி அனுப்புகின்றனர். கையில் கோலுடன் மிரட்டி வாகனங்களை வழிமறிக்கும் இவர்களை காவல்துறையும் கண்டு கொள்வதில்லை என்கின்றனர். காரணம் அவர்கள் அந்த ஊரில் செல்வாக்கான மனிதர்களாம்.
இது ஒருபுறமிருக்க தொண்டு நிறுவனங்கள் பல கடலுார் ஆட்சியரிடம் தங்கள் நிவாரணப்பொருட்களை ஒப்படைத்து செல்வதால் ஆட்சியர் அலுவலகத்தில் கரைவேட்டிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆளும் கட்சி என்றோ எதிர்க்கட்சி என்றோ குரலுயர்த்தும் அவர்கள் தங்கள் பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்களை பெற்று வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு எடுத்துச்செல்லப்படும் பொருட்கள் உரியவர்களுக்கு போய்ச் சேர்கிறதா என்பது சந்தேகம்.
அரசுக்கு ஈடாக முன்வந்து தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு உதவ முன் வரும்போது அவற்றை முறையாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாத காரணத்தினால் ஏற்படும் இந்த இன்னல்கள் வெள்ள பாதிப்பை விட அதிக வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது கடலுார் மாவட்ட மக்களுக்கு.
க. பூபாலன்
நன்றி : விகடன்
No comments:
Post a Comment