ஓசூர்: ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை, தீயணைப்பு படையினர் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர். தீயணைப்பு படையினரின் துரித பணியை பொதுமக்கள் பாராட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அகலகோட்டை அடுத்த மந்தையூரை சேர்ந்தவர் ஆனந்தன்(30), இவரது மனைவி பத்மா(26). இவர்களுக்கு பூஜா(3) என்ற பெண் குழந்தையும், குணா(2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதியில் ஆனந்தனுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு கடந்த 29ம் தேதி 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது.
ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடியும் போது, நள்ளிரவு ஆனது. இதனால் ஆள்துளை கிணற்றை மூடாமல் அப்படியே வி்ட்டுவிட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் பத்மா, தனது 2 குழந்தைகளுடன் விவசாய நிலத்திற்கு துணி துவைக்க சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மூடப்படாமல் இருந்த 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் குணா தவறி விழுந்தான். அதை கண்டு பயந்த பூஜா, தனது தாயிடம் கூறியுள்ளாள்.
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் மற்றும் அப்பகுதியினர் உதவியுடன் நடைபெற்ற சிறுவனை மீட்கும் பணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இது குறித்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் சித்ராவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வருவாய் அலுவலர் பால்ராஜ், வி.ஏ.ஓ. மாதேஸ், ஆகியோர் விரைந்து வந்தனர்.
தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ், டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தீயணைப்பு துறையினர் ஆழ்துளை கிணற்றில் கயிறு விட்டு பார்த்த போது, சிறுவன் 20 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 2 ஜே.சி.பி.க்கள் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் தோண்டு பணி நடைபெற்றது. காலையில் 11.30 மணிக்கு துவங்கிய பணி, மதியம் 1.30 மணி வரை நீடித்தது. 15 அடி அழத்தில் பாறை வந்ததால், மேற்கொண்ட தோண்ட முடியவில்லை.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் குழியின் பக்கவாட்டில் குழி தோண்டி மேலும் 4 அடி வரை சென்றனர். ஆனால் சிறுவனை மீட்க முடியாமல் போனதால், 5 அடி நீள கொக்கி கம்பி மற்றும் நூல்கயிறு கொண்டு, சிறுவனை மீட்கும் முயற்சி நடைபெற்றது. இதில் கொக்கி சிறுவனின் சட்டையில் சிக்கியது மேலும் நூல் கயிறு சிறுவனின் கையில் சிக்கியது. இதன் மூலம் சிறுவன் மெதுவாக வெளியே எடுக்கப்பட்டான்.
அதன்பிறகு வெளியே தயாராக இருந்த டாக்டர்கள் சிறுவன் குணாவிற்கு முதலுதவி அளித்தனர். மேலும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு குணா கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் குணாவை, உயிரோடு மீட்ட, தீயணைப்பு துறையினரின் பணியை பொதுமக்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment