Latest News

  

திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் பாஜகவுக்கு எதிரான அதிமுக வழக்கறிஞரின் வேட்பு மனு தள்ளுபடி: உரிய நேரத்தில் கட்சியின் அங்கீகார கடிதம் வழங்கவில்லை என அறிவிப்பு

 

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜகவை எதிர்த்து போட்டியிட தாக்கல் செய்த அதிமுக வழக்கறிஞரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் பொது பார்வையாளர் அருண் கிஷோர் மற்றும் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வெற்றிவேல் ஆகியோர் தலை மையில், தாக்கல் செய்யப்பட்ட 26 பேரின் வேட்பு மனுக்கள். பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. திமுக வேட்பாளர் எ.வ.வேலு, பாஜக வேட்பாளர் தணிகைவேல் உட்பட 19 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதற்கிடையில், அதிமுக சார்பில் வழக்கறிஞர் அன்பழகன் தாக்கல் செய்த வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது, வேட்பு மனுவுடன் கட்சியின் அங்கீகார கடிதத்தை, கடைசி நாளான 19-ம் தேதி மதியம் 3 மணிக்குள் வழங்கவில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேல் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் அன்பழகன், 'நான் வேட்பு மனுவை 19-ம் தேதி மதியம் 2.51 மணிக்கு தாக்கல் செய்தேன். எனது மனுவில் விடுப்பட்டுள்ளவை குறித்து தகவலை, தாங்களே (கோட்டாட்சியர்) தாமதமாக தெரி வித்தீர்கள். உங்களை சந்திக்கவும், உங்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் என்னை அனுமதிக்க மறுத்தனர். மேலும், வேட்பு மனு பரிசீலனைக்கு முன்பாக, கட்சியின் அங்கீகார கடிதம் உட்பட அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளேன்' என்றார்.

அதிமுக - பாஜக வாக்குவாதம்

அன்பழகன் மனு மீது ஆட்சேபம் இருக்கிறதா? என கோட்டாட்சியர் கேள்வி எழுப்பியபோது, திமுக தரப்பில் பங்கேற்ற வழக்கறி ஞர்கள் மனோகரன், பழனி உள் ளிட்டவர்கள் ஆட்சேபம் இல்லை என்றனர். அதே நேரத்தில், கட்சியின் அங்கீகார கடிதம் இல்லாமல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாஜகவினர் தெரிவித்தனர். இதனால், பாஜக மற்றும் அதிமுகவினர் இடையே சுமார் 15 நிமிடங்கள் வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த கோட்டாட்சியர், நீங்கள் யாரும் நேருக்கு நேராக பேசிக் கொள்ளக் கூடாது. ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம். மற்றபடி, எந்த கருத்தையும் நீங்கள் (பாஜகவினர்) தெரிவிக்கக்கூடாது என்றார்.

பின்னர் அவர், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதி களை சுட்டிக்காட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று மதியம் 3-ம் மணிக்குள் கட்சியின் அங்கீகார கடிதம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத வேட்பு மனுவை தள்ளுபடி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அதற்கான ஆதாரங்களை அதிமுக வழக்கறிஞர் அன்பழகனிடம் காண்பித்தார். இதையடுத்து, உரிய காலத்துக்குள் கட்சியின் அங்கீகாரம் கடிதம் வழங்கவில்லை எனக் கூறி, அன்பழகன் வேட்பு மனுவை தள்ளுபடி செய்கிறேன் என தெரிவித்தார். அதன்பிறகு, பாஜக மற்றும் அதிமுகவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

19 பேரது மனுக்கள் ஏற்பு

இது குறித்து தி.மலை கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருரான வெற்றிவேல் கூறும்போது, 'வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று மதியம் 3-ம் மணிக்குள் கட்சியின் அங்கீகாரம் கடிதம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 19-ம் தேதி (நேற்று முன்தினம்) மதியம் 3 மணிக்குள், அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த அன்பழகன், கட்சியின் அங்கீகார கடிதத்தை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர், அங்கீகார கடிதத்தை வேட்பு மனு பரிசீலனை தொடங்குவற்கு முன்பாக கொடுத்துவிட்டு, பரிசீலனையில் அமர்ந்தார். உரிய காலத்தில் அங்கீகார கடிதத்தை கொடுக்காததால், அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுயேட்சையாக அவரது வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ள 10 பேர் முன்மொழிந்திருக்க வேண்டும். ஆனால், அவரது மனுவில் ஒருவர் மட்டுமே முன்மொழிந்துள்ளார். எனவே, சுயேட்சைக்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. 19 பேரது மனுக்கள் ஏற்கப்பட்டது. 7 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது' என்றார். முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நண்பகல் 12.15 மணிக்கு நிறைவு பெற்றது.

Source : www.hindutamil.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.