
சென்னை: என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள முதலமைச்சருக்கு நன்றி என்று தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ. இராசா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்மையில் 2ஜி வழக்கு குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆதாரமற்ற தான்தோன்றி தனமான அவதூறுகளை என்மீது சுமத்தியதை தொடர்ந்து முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்றும், அவர் ஊழல் செய்து அடித்த கொள்ளை அரசியல் சட்டத்தின் மீது அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை சிதைத்தது மட்டுமன்றி, ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக விளங்கும் அரசியல் சட்டத்தையே படுகொலை செய்த செயலாகும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆதாரத்தோடு நான் பேசியதை, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153 மற்றும் 505ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் தமிழக காவல்துறை என்மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள இவ்வழக்கின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமேயானால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய கண்டன கருத்துக்களை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்ற அந்த அடிப்படையில் இவ்வழக்கை வரவேற்று, முதலமைச்சருக்கும், தமிழக காவல்துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்மீது போடப்படும் வழக்கை பயன்படுத்தியே ஜெயலலிதா செய்த ஊழலையும், ஜெயலலிதாவை பின்தொடர்ந்து அவரை போலவே ஊழலில் திளைக்கும் முதலமைச்சரையும், இந்த அரசையும் தோலுரித்து காட்டுவதோடு விரைவில் அமையவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இப்போது ஊழலில் திளைக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment