
அவிநாசி: அவிநாசி தாமரைக் குளத்திற்குள் குப்பைகளைக் கொட்டிய வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினரை முற்றுகையிட்டதால், கொட்டப்பட்ட குப்பைகள் புதன்கிழமை திருப்பி அள்ளப்பட்டது.
அவிநாசியின் பிரதான நீராதாரக் குளமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க தாமரைக்குளமும், சங்கமாங்குளமும் உள்ளது. இதனை அவிநாசி பகுதியைச் சேர்ந்த பல்வேறு சமூக அமைப்பினர் தூர்வாறுதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து நீர்வழிப்பாதைகளைப் பாராமரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அவிநாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை புதன்கிழமை மாலை ஊராட்சி நிர்வாகத்தினர் தாமரைக்குளம் பகுதியில் கொட்டினர். இதையறிந்த அப்பகுதி மக்கள், விவசாயிகள் குப்பை கொட்டிய லாரியைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியது: விரைவில் அத்திக்கடவு நீர் வரவுள்ளநிலையில், வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் இது போல குப்பைகளைக் கொட்டுவது முறையல்ல. ஏற்கனவே பல முறை குப்பைகளை கொட்ட வரும் போது எச்சரிக்கை விடுத்துள்ளோம் இருப்பினும் ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டு கொள்வதில்லை.
எனவே கொட்டிய குப்பைகளை திரும்ப அள்ளிச் செல்ல வேண்டும். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment