
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.
கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை.
கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கரோனா விவகாரத்தில் மத்திய அரசு செயலிழந்து விட்டதாக காங்கிரஸ் ஏற்கெனவே புகார் கூறி வருகிறது. எனவே இந்த பிரச்சினையை பெரிய அளவில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment