காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் துவிவேதியின் மகன் சமீர் துவிவேதி
பாஜக பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் முன்னிலையில் இன்று அக்கட்சியில்
இணைந்தார்.
பிரதமர் மோடியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில்
இணைந்தேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு என்று சமீர் துவிவேதி
தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜனார்த்தன
துவிவேதி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து
வருகிறார். அவரின் மகன் தற்போது திடீரென பாஜகவில் இணைந்தது அந்தக்
கட்சியினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது.
டெல்லியில்
உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் அர்ஜுன்
சிங் முன்னிலையில் சமீர் துவிவேதி பாஜகவில் இணைந்தார்.
அதன்பின்
சமீர் துவிவேதி நிருபர்களிடம் கூறுகையில், "நான் முதல் முறையாக அரசியல்
கட்சியில் சேர்ந்துள்ளேன். பிரதமர் மோடியின் பணிகள், திட்டங்கள்,
கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நான் பாஜகவில் இணைந்தேன். காஷ்மீரில் 370-வது
பிரிவு நீக்கம், முத்தலாக் நடைமுறைக்குத் தடை, குடியுரிமைத் திருத்தச்
சட்டம் போன்ற துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தது எனக்குப் பிடித்திருந்தது.
இது என்னுடைய தனிப்பட்ட முடிவு.
டெல்லி ஷாஹின் பாக்.
போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர்கள்தான், கடந்த 1962-ம் ஆண்டு சீனாவுக்கு
ஆதரவாகப் பேசினார்கள். ஷாஹின் பாகில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு
எதிராகப் போராடும் பெண்களின் நலனுக்காகத்தான் பிரதமர் மோடி முத்தலாக்
நடைமுறையை ஒழித்தார். அப்படி இருக்கும்போது, எவ்வாறு குடியுரிமையை அவர்
பறிப்பார் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நாம் இன்று பிரதமர் மோடியை
ஆதரிக்காவிட்டால், இந்தியாவில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் இந்த
நெருப்பை நம்மால் அணைக்க முடியாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு
எதிரான போராட்டம் வகுப்புவாத போராட்டமாக மாறியுள்ளது" எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment