 
                
 நீதி என்பது பழிவாங்கக் கூடிய போக்காக மாறிவிட்டால், அது 
அதன் தன்மையை இழந்துவிடும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் 
அர்விந்த் பாப்தே தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் 
உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) 
நடைபெற்றது. அதைத் திறந்து வைத்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ 
பாப்தே, 
"நாட்டில் நிகழும் சமீபத்திய 
நிகழ்வுகள், பழைய விவாதங்களுக்கு புதிய வீரியத்தை அளித்துள்ளன. குற்றவியல் 
நீதித்துறை அமைப்பு அதன் நிலையையும், நேரம் குறித்த அணுகுமுறை 
உள்ளிட்டவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதில் எந்தவித சந்தேகமும் 
கிடையாது.                
                
ஆனால் நீதி என்பது உடனடியாகக் 
கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. நீதி எப்போதுமே பழிவாங்கும் போக்காக இருக்கக் 
கூடாது. நீதி என்பது பழிவாங்கக் கூடிய போக்காக மாறிவிட்டால், அது அதன் 
தன்மையை இழந்துவிடும்.
நீதித்துறையில் சுய திருத்தங்களை 
மேற்கொள்வதற்கானத் தேவை உள்ளது. அது விளம்பரப்படுத்தப்பட வேண்டுமா என்பது 
வேண்டுமானால் விவாதத்துக்குரிய விஷயமாக இருக்கலாம்" என்றார்.
தெலங்கானாவில்
 கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 
வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸார் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் 
கொன்றனர். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் விமரிசனங்களும் 
கிளம்பியுள்ள நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்தே இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.
 

 
No comments:
Post a Comment