Latest News

நாளை துவங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை, ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை பள்ளிக்கல்வித்துறை நடத்த இருந்த நிலையில், அதனை தள்ளி வைக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவில், அருகில் உள்ள பள்ளிகளில் காலியிடங்கள் இருந்தும், அரசு விதித்துள்ள புதிய நிபந்தனைகள் காரணமாக அதற்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.


அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றியவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க இயலும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கட் ஆஃப் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சீனியர்கள் பங்கேற்க இயலாமல் ஜூனியர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், ஆசிரியர்கள் தங்களது மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே பணிமாறுதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.