
ஈரோடு: முன்னாள் அதிமுக அமைச்சரும் எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சசலம் பெருந்துறை கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி, பொது மக்களுடன் இணைந்து ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அப்போது சிப்காட் தொழிற்சாலையில் அமைய உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதிமுகவில் அண்மைக்காலமாக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் எம்எல்ஏ, தோப்பு வெங்கடாச்சலம். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்எல்ஏவான இவர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர். இவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற வேதனையில் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் பரவின. இதனை அவர் மறுத்தாலும் அவரது அண்மைக்கால செயல்பாடுகள் அதிருப்தியில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை , பெருந்துறை, ஊத்துக்குளி மற்றும் சென்னிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களை திரட்டிச் சென்று மனு ஒன்றை ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்துள்ளார்.
அதில் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து வரும் சாயக்கழிவுகளால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுள்ளதாகவும் பெருந்துறை கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் சிப்காட் தொழிற்சாலையில் அமையவுள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே பெருந்துறை பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, 248 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்காக கொடிவேரி அணைப்பகுதிக்குள் கிணறு வெட்டும் பணி தொடங்கிய நிலையில், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என தடப்பள்ளி, அரக்கண்கோட்டை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment