Latest News

கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: தமிழக அரசின் ஆணைக்குத் தடை



புது தில்லி: கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. மேலும் கடைகளை அகற்றவும் கெடு விதித்திருந்தது.

அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து குமார் மற்றும் இதர வியாபாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணையில் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள், இந்து சமய அறநிலையத்துறை, தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது, கோவில்களில் உள்ள கடைக்காரர்களின் தரப்பு கருத்துகளை கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு ஏன் தமிழக அரசு வழங்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து அறநிலையத்துறை சட்டம் 1959-ன் அடிப்படையில் கோவில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதற்கான நடைமுறைகளின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க கடை உரிமையாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்து விட்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுறுத்தினர்.

திங்களன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.