
நாகர்கோவில்: இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி இருப்பார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதனன்று
நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார
பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் விவரம்
பின்வருமாறு:
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கக்கூடிய இந்திய துணைக் கண்டத்தினுடைய அடிமுனையில் கூடி இருக்கின்றோம்.
இந்திய நாடு தனக்கான ஒரு புதிய பிரதமரை தேர்வு
செய்யக்கூடிய ஜனநாயகக் கடமை இன்னும் சில வாரங்களில் நடைபெறவிருக்கின்றது.
இந்தியா யாரை பிரதமராக தேர்வு செய்யவிருக்கின்றதோ அந்த இந்தியாவின் "இளம்
பிரதமர்" ராகுல் அவர்கள் இந்த மேடைக்கு வந்திருக்கின்றார்கள்.
உறுதியோடு
சொல்லுகின்றேன், இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்
காந்தி அவர்கள் தான். உங்கள் கைகளில் இந்திய தேசம் பாதுகாப்பானதாக வளம்
உள்ளதாக, மதச்சார்பற்றதாக, ஆரோக்கியமானதுமாக இருக்கும் என்ற நம்பிக்கை
எங்களுக்கெல்லாம் இருக்கிறது. அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல.
எதிர்பார்ப்பும் ஆசையும் அதுவாகத்தான் இருக்கின்றது. ஆசை மட்டுமல்ல, அது
தான் உண்மையாக ஏற்படவிருக்கும் வரலாறு என்பதை இங்கு நான் பதிவு செய்ய
விரும்புகின்றேன். அதனால்தான் யாரும் சொல்வதற்கு முன்னால், நான்
துணிச்சலோடு சொன்னேன், அடுத்த பிரதமர் ராகுல் தான் என்று.
ஒளிமயமான
இந்தியாவைத் தாருங்கள் என்று சொல்லுகின்ற போது இந்தியா இப்போது இருள்
மயமானதாக இருக்கிறது என்று நமக்கெல்லாம் நன்றாகத் தெரிகின்றது. நரேந்திர
மோடி அவர்கள் புதுபுது உடைகளை உடுத்திக்கொண்டு விதவிதமான தொப்பிகளை
போட்டுக்கொண்டு நாடு நாடாக அவர் சுற்றிக் கொண்டிருக்கின்றார். அவர் தான்
ஒளிர்ந்து கொண்டு ஒளி மயமாக மாறிக் கொண்டிருக்கின்றாரே தவிர, இந்தியா
ஒளிமயமானதாக இன்னமும் மாறிடவில்லை. வளர்ச்சி - வளர்ச்சி - வளர்ச்சி -
வளர்ச்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால்,
இன்று இருக்கக்கூடிய நிலை என்னவென்று கேட்டால் தளர்ச்சி - தளர்ச்சி -
தளர்ச்சி ஆகிய இந்த மூன்றைத் தான் இந்தியாவில் பார்க்கிறோம்.
நாட்டின்
பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது 3வது நிதியாண்டில் 6.6 சதவிகிதம்
குறைந்திருக்கின்றது. மோடி வந்தால் புதிய திட்டங்கள் வரும், நிறுவனங்கள்
திறக்கப்படும், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இளைஞர்கள் நம்பினார்கள்.
ஆனால் இருக்கக்கூடிய நிலை, புதிய திட்டங்களும் வரவில்லை, புதிய
நிறுவனங்களும் திறக்கப்படவில்லை, புதிய வேலை வாய்ப்புகளும்
உருவாக்கப்படவில்லை. பிரதமர் ஆவதற்கு முன்னால் அவர் தொடர்ந்து சொன்னது
கருப்புப்பணம் ஒழிப்பது தான் என்னுடைய முதல் வேலை என்று சொன்னார்.
இந்தியாவுக்கு வெளியே 90 லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணம் இருக்கிறது. அதை
மீட்டு இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கிகளில் 15
லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்று சொன்னார். தந்திருக்கிறாரா? 15
லட்சம் வேண்டாம். 15 ஆயிரம் ரூபாயாவது? நான் இன்னும் கேட்கின்றேன். 15
ரூபாயாவது இன்றைக்கு டெபாசிட் செய்யபட்டிருக்கின்றதா? இல்லை. கருப்புப்பணம்
எந்த நாட்டில் எந்த வங்கியில் எவ்வளவு இருக்கிறது என்று மோடி அவர்கள்
விளக்கியிருக்கின்றாரா? இல்லை.
கண்கட்டி
வித்தைக்காரனைப்போல கருப்புப்பணம் இருக்கின்றது, இருக்கின்றது என்று
பூச்சாண்டி காட்டினாரே தவிர அவர் கருப்புப்பணத்தை மீட்கவில்லை. எங்கே,
கருப்புப்பணம் என்று கேட்டதும், என்ன செய்தார் என்றால் நாட்டில் உள்ள நல்ல
பணம் எல்லாவற்றையும் ஒழித்தார். ஒரு திருடனை கண்டுபிடிக்க வேண்டுமென்று
சொன்னால் ஊரில் உள்ள அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்து அதில்
இருந்து திருடனைக் கண்டுபிடிக்கக்கூடிய அதிபுத்திசாலி தான் இன்றைக்கு
பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள், இப்படி ஒரு துக்ளக் தர்பாரை மோடி
இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றார்.
ஊழலே இல்லாத
ஆட்சியைத் தருவேன் என்று சொன்னார் மோடி அவர்கள். ரஃபேல் ஊழல் ஒன்று போதாதா?
ரஃபேல் ஊழல் அம்பலம் ஆனதும் என்ன சொன்னார்கள்? ஊழலே நடக்கவில்லை, பொய்
சொல்லுகிறார்கள் என்றார்கள். 41 சதவிகிதம் அளவுக்கு விலையைக் கூட்டி
வாங்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார் இந்து ராம்
அவர்கள். ஆவணங்கள் அனைத்தையும் திருடி விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
இதற்காக இந்து ராம் மிரட்டப்படுகிறார். ஆனால், இந்து ராம் மிரட்டலுக்கு
பயப்படவில்லை. அதற்காக நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்
மீது நடவடிக்கை எடுத்தால் நான் உறுதியோடு சொல்லுகின்றேன், தி.மு.க
மட்டுமல்ல இங்கு இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் இந்து ராம்
அவர்களுக்கு பக்கபலமாக இருப்போம், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
மோடி
அவர்களே! உங்களுக்கு எதிராக இந்துவும் மாறிவிட்டது - நாடும் மாறிவிட்டது.
இந்து - ராம் என்ற இரண்டு வார்த்தைகளை வைத்துத்தான் நீங்கள் வெற்றிபெற
நினைத்தீர்கள். ஆனால், அந்த இரண்டு வார்த்தைகளைப் பார்த்தே இன்றைக்கு
நீங்கள் பயப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை வந்திருக்கின்றது. மோடிக்கு இப்போது
தான் இந்தியாவின் நினைப்பு வந்திருக்கிறது. வெளிநாடு வாழ் பிரதமராக
இருக்ககூடிய மோடி அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி
வருகின்றார். அதில் வேடிக்கை என்னவென்று கேட்டீர்கள் என்றால், அந்த தேர்தல்
பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் நேரத்தில் அடிக்கல் நாட்டு விழாவையும்
தொடர்ந்து நடத்திக் காட்டிக் கொண்டிருக்கின்றார். யார் ஆட்சிக்கு
வந்தாலும், யார் பதவிக்கு வந்தாலும் இரண்டு ஆண்டுகளில் அடிக்கல் நாட்டு
விழாவை நடத்திட வேண்டும். அதன்பிறகு 4வது, 5வது ஆண்டில் அதற்குரிய திறப்பு
விழாவை நடத்திக் காட்டிட வேண்டும். அப்பொழுதுதான் திறமை இருக்கின்றது என்று
நாம் எண்ணிட முடியும். ஆனால், கடந்த சில மாதங்களாக மோடி அவர்கள்
செல்லக்கூடிய பயணத்திட்டத்தை பார்த்தால், அதை NDTV தொலைக்காட்சி கூட
ஆதாரத்தோடு வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த 30 நாட்களில் 155
திட்டங்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார் என்று
ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள்.
நரேந்திர
மோடி பார்க்கும் ஒரே வேலை அடிக்கல் நாட்டு விழா தான். அடிக்கல் நாட்டு
விழாவைத் தான் நடத்திக் கொண்டிருக்கின்றார். எல்லோரும் aவரை அயன்
பிரைமினிஸ்டர் என்று சொல்கின்றார்கள். அவர் அயர்ன் பிரைமினிஸ்டர் அல்ல அவர்
ஒரு 'ஸ்டோன் பிரைமினிஸ்டர்'. இது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய மோடியின்
நிலை.
வெறும் விளம்பரங்கள் தான். பக்கம் பக்கமாக மக்களுடைய
வரிப்பணங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு செலவு செய்து தினம்தோறும்
பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட
விளம்பரத்தை தந்து கொண்டிருக்கக்கூடிய மோடி அவர்களுக்கு, இப்பொழுது திடீரென
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு வந்திருக்கின்றது. அவர், 1966ம்
ஆண்டு பசுவதை தடை சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்று சொல்லி டெல்லியில்,
சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊர்வலத்தை நடத்தினார்கள். அப்படி
நடத்திய நேரத்தில் வன்முறையைத் தூண்டி விட்டார்கள்.
அதிலும்
குறிப்பாக அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெருந்தலைவர்
காமராஜர் வீட்டிற்குள் நுழைந்து தீ வைத்த கொடுமையை செய்தவர்கள் அவர்கள்.
அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றிப்
பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? என்ன தகுதி இருக்கின்றது? என்ற
கேள்வியை இன்றைக்கு நான் கேட்க விரும்புகின்றேன்.
வி.பி.சிங்
அவர்கள் பிரதமராக இருந்தபோது சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர்
அவர்களின் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தபோது, அதனை
நிறைவேற்றித் தந்தவர் அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த தலைவர் கலைஞர்
அவர்கள். அதற்குக் காரணமாக இருந்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள். காமராஜர்
பிறந்த ஜூலை 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து ஒவ்வொரு
பள்ளிக்கூடத்திலும் காமராஜருக்கு விழா கொண்டாடிட வேண்டும் என்று
சட்டசபையில் தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றி, அதற்கு வழி வகுத்துத்
தந்தவர் தமிழக முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். இப்படி எதையாவது
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் சேர்க்கக்கூடிய வகையில் மோடி
செய்ததுண்டா?
இப்பொழுது, வடக்கே படேல் பெயரைச் சொல்லி
ஓட்டு கேட்க நினைக்கின்றார்கள். தெற்கே பெருந்தலைவர் காமராஜர் பெயரைச்
சொல்லி ஓட்டு கேட்க முயற்சிக்கின்றார்கள். மோடியைப் பார்த்தால் பரிதாபமாக
இருக்கிறது. காரணம் உங்களுக்கு ஓட்டு வாங்க மக்களிடத்தில் சென்று ஆதரவு
கேட்க உங்கள் கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பெயரைச் சொல்வதற்கு
வக்கற்ற நிலையில் இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி இருக்கின்றது என்று
எண்ணிப்பார்க்கின்ற போது இதைவிட வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் மோடியின் எடுபிடி ஆட்சியாக மோடியின் பினாமி
ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றது.
தலைமைச்
செயலகத்தில் ரெய்டு செய்கின்றார்கள். அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு
நடக்கிறது. முதலமைச்சரின் பினாமி வீட்டில் ரெய்டு செய்கின்றார்கள்.
அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்தார்கள். அமைச்சர்களை அழைத்து கவர்னர்
மிரட்டுகிறார். முதல்வரை அழைத்து பிரதமர் மிரட்டுகிறார். மொத்தத்தில்
தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய இந்த மாநில ஆட்சி என்பது கொத்தடிமை ஆட்சியாக
இருக்கின்றது. கொலை வழக்கு என்று மிரட்டி ஈ.பி.எஸ்யையும், கொள்ளை வழக்கு
என்று மிரட்டி ஓ.பி.எஸ்யையும் மிரட்டி இன்றைக்கு பினாமி ஆட்சியை பி.ஜே.பி
நடத்திக் கொண்டிருக்கின்றது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக
தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் ஒரு கொடுமையான செய்தி வந்து
கொண்டிருக்கிறது. பொள்ளாச்சியில் நடந்திருக்கக்கூடிய ஒரு கொடுமை. 200க்கும்
மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்பப்படுத்தப்பட்டு என்னென்ன கொடுமைகளுக்கு
எல்லாம் ஆளாகியிருக்கின்றார்கள் என்பதை எல்லாம் எண்ணிப்பார்க்கின்ற போது
இப்பொழுது நடைபெறக்கூடிய ஆட்சி என்பது வெறும் ஊழல் ஆட்சி மட்டுமல்ல, லஞ்சம்
லாவன்யம் உள்ள ஆட்சி மட்டுமல்ல, கொள்ளைக்கார ஆட்சி மட்டுமல்ல, கொலைகார
ஆட்சி மட்டுமல்ல, பெண்கள் எல்லாம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படக்கூடிய
ஒரு அநியாய அக்கிரமமான ஆட்சியை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அதனால் தான் நான் மேற்கு வங்கத்திற்கு சென்று கல்கத்தாவில் நடைபெற்ற
மாநாட்டில் குறிப்பிட்டுச் சொன்னேன். இந்தியாவுக்கான இரண்டாவது விடுதலைப்
போரை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். ஆகவே, நாம் சந்திக்க இருப்பது
வெறும் தேர்தல் அல்ல, ஜனநாயகப் போர்! வெறும் ஆட்சி மாற்றம் அல்ல, அதிகார
மாற்றம்! ஆணவம் பிடித்த பாசிச மோடியின் கைகளில் இருந்து ஆட்சியைப்
பிடிக்கக்கூடிய இந்த போரில் ராகுல் காந்தியோடு நாம் கை கோர்ப்போம்! என்ற
உறுதி எடுக்க இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.
ராகுல்
காந்தி அவர்களே, 2004ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்
40க்கு 40 வாங்கிக் கொடுத்த அணி தான் இந்த மேடையில் இருக்கக்கூடிய அணி.
இப்போது 2019 தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியைப் பெற்று உங்களை நான்
டெல்லியில் வந்து சந்திப்பேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவிக்க
விரும்புகின்றேன். இந்தியாவின் ஆட்சி சக்கரம் இன்னும் சில வாரங்களில்
உங்கள் கைக்கு வரப்போகிறது. 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்று
பேரறிஞர் அண்ணா சொன்னார். உங்களது ஆட்சி ஏழைகளுக்காக நடைபெறக்கூடிய
ஆட்சியாக அமைந்திட வேண்டும். 'நான் சாமானியர்களுக்காக ஆட்சி
நடத்துகின்றேன்' என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதேபோல், உங்கள்
ஆட்சி சாமனியர்களுக்கான ஆட்சியாக அமைய வேண்டும். எனவே, நீங்கள் அதை
வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்ப இருக்கின்றது. நாங்கள்
உங்களை ஆதரிக்க ஒரே ஒரு காரணம் நீங்கள் மோடி அல்ல! நீங்கள் ராகுல் -
ராகுல். அதனால் தான் உங்களை ஆதரிக்கின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

No comments:
Post a Comment