
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
13 பேர் பலி
ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு படுவதாக அப்பகுதி மக்கள்
புகார் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட
வலியுறுத்தி, கடந்த மே மாதம் 22-ஆம் தேதி பெரும் போராட்டம் வெடித்தது.
அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி
இந்த சம்பவத்திற்கு பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல்
வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை
தீர்ப்பாயத்தை அணுகியது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க
தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.

உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின்
கோரிக்கையை ஏற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து
ஆணையிட்டனர். அதேசமயம் இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்
நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஓரிரு நாட்களில் விசாரணை
அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க கோரி சென்னை
உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் மனு
தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும்
என தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment