
இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று, மனிதநேய
மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிப்ரவரி 14ஆம் தேதி, காஷ்மீர் மாநிலம்
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய
விமானப் படை சார்பில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில்
தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் இன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலில், இந்திய
விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவப் பிடியில் சிக்கியதை
இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் பிடியில் சிக்கியிருக்கும் விமானி, அபிநந்தன் பத்திரமாக
மீட்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக்
கேட்டுக் கொள்கிறேன்.
ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, ஒவ்வோர் அரசும் போர்க் கைதிகளை
மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த
ஒப்பந்தத்தின்படி இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு மனிதாபிமான
அடிப்படையில் நடத்தவேண்டும் என்றும், விமானியை உடனடியாக மீட்க ராஜாங்க
நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்
கொள்கிறேன்.
பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள விமானி அபிநந்தன் விரைவில் நாடு திரும்ப
எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு, ஜவாஹிருல்லா தனது
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment