வரலாறு எழுதுகையில் முஸ்லிம் இருப்பு
என்பது கண்ணுக்குப் புலப்படாததாக ஆக்கப்படுவது (invisiblisation)
ஒருபக்கம், முற்றிலும் எதிர்மறையாகக் காட்சிப் படுத்துவது இன்னொருபக்கம்
என்பதக இன்றைய இந்துத்துவச் செயல்பாடுகள் அமைந்து உள்ளதை அறிவோம். இன்னொரு
பக்கம் முஸ்லிம்களி்ன் இருப்பையும் வரலாற்றில் அவர்களின் பங்களிப்பையும்
எழுதுகிறேன் என வருபவர்களும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்வது இன்னொரு
பக்கம்.
எடுத்துக்காட்டாக சுதந்திரப் போராட்ட
வரலாறை எடுத்துக் கொள்வோம். சுதந்திரப்போராட்டம் என்றால் பகதூர் ஷா சஃபர்,
பேகம் ஹஸ்ரத் மகல், திப்பு சுல்தான், அபுல் கலாம் ஆசாத் என ஒரு பட்டியல்
போடுவதோடு நிறுத்திக் கொள்வது இந்த மரபினரின் வழக்கமாகிவிடுகிறது.
ஆனால் வெள்ளையர்களுக்கான இந்திய
சுதந்திரப் போராட்டத்தில் இன்னும் பல முஸ்லிம்கள் பங்கு பெற்றுள்ளனர்.
சையத் உபைதூர் ரஹ்மான் எழுதியுள்ள Muslim Freedom Fighters : Contribution
of Indian Freedom Fighters in the Independance Movement எனும் சமீபத்திய
நூல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்து வேறு
பல, வழக்கமான வரலாறுகளில் கண்ணுக்கு மறைக்கப்படுகிற அல்லது அதிக
முக்கியத்துவம் தராது கடந்து போகிற சுமார் 40முஸ்லிம் ஆளுமைகளை
அறிமுகப்படுத்துகிறது.
தியோபந்த் இந்திய உலமாக்கள் முன்னெடுத்த
'ரெஷ்மி ரூமல் தெஹ்ரிக் (The Silk Letter Movement - பட்டு எழுத்து
இயக்கம்) பற்றி நமது பாடநூல்கல் அதிகம் சொல்வதில்லை. இந்நூலில் அது
குறித்து விரிவாகச் சொல்லப்படுகிறது. 1913 -20 காலகட்டத்தில் தியோபந்த்
உலமாக்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த இயக்கம் துருக்கி
ஆட்டோமன் பேரரசு, இம்பீரியல் ஜெர்மனி, ஆஃப்கானிஸ்தான் ஆகியவற்றுடன் கூட்டணி
அமைத்து இந்தியாவை பிரிட்டிஷ் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு முயன்றது.
ஆஃப்கானிஸ்தானிலிருந்து செயல்பட்ட
தியோபந்தியான உபைதுல்லா சிந்தி, 'சைகுல் ஹிந்த்' எனப்படும் மஹ்மூத்
ஹஸனுக்கு எழுதிய கடிதம் ஒன்றை பஞ்சாப் உளவுத்துறை கைப்பற்றி இந்த இயக்கம்
குறித்த தகவல் வெளிவந்தது.
அவர்கள் நாடுகடந்த இந்திய அரசு ஒன்றையும்
அன்று பிரகடனப் படுத்தினார்கள். மகாராஜா மகிந்தர் பிரதாப் சிங் அதன்
தலைவர். மௌலானா பர்கத்துல்லா போபாலி அதன் பிரதமர். மௌலானா உபயதுல்லா சிந்தி
அதன் உள்துறை அமைச்சர்.
முதல் சுதந்திரப்போர் என அழைக்கப்படும் 1857 கிளர்ச்சி கிழக்கிந்தியக் கம்பெனியின் பரம்பலை (expansion) சரியாக அடையாளம் கண்டு அதற்கு எதிராகக் கிளர்ந்தது என்றால் திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் தான் பிரிட்டிஷ் விரிவாக்கத்தைச் சரியாக இனங்கண்டு அதற்கெதிரான ஒரு கடும் எதிர்ப்பை மேற்கொண்டு மடிந்த மன்னர்களாக இருந்தனர். இந்தப் பரந்த இந்திய மண்ணில் வேறு யாரும் அப்படியான ஒரு எதிர்ப்பிற்கும் தியாகத்திற்கும் அன்று முன்வரவில்லை.
ஃப்ரெஞ்சுப் புரட்சியாளர்களுடன் திப்பு
தொடர்பில் இருந்த வரலாறெல்லாம் இங்கு உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை.
1857ல் கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷா தலைமையில் இந்துக்களும்
முஸ்லிம்களும் இணைந்து நின்று கிழக்கிந்தியக் கம்பெனியையும் அதன் படையையும்
எதிர்த்து நின்றனர். லனோவில் பேகம் ஹஸ்ரத் மகால் கும்பினிப் படைகளை
வீழ்த்தியதோடு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் அந்நியப் படைகளை உள்ளே நுழைய
விடவில்லை.
"சென்ற நூற்றாண்டின் முதல் இரு
பத்தாண்டுகளில் இந்திய சுதந்திரத்திற்கானப் போராட்டத்தில் முன்னின்றது
இந்திய தேசியக் காங்கிரசோ இல்லை வேறு யாருமோ அல்ல. அக்காலகட்டத்தில்
போராட்டத்தை முன்னெடுத்தது மகமூத் அல் ஹசன். அவருக்குத் துணை நின்றது
தியோபந்த் உலமாக்கள். .. இந்தியத் தலைவர்கள் வெறும் டொமினியன்
அதிகாரத்திற்குக் கூட எவ்வாறு குரல் எழுப்புவது எனத் திணறிக் கொண்டிருந்த
காலகட்டத்தில் இவர்கள் தமது இந்துத் தோழர்களுடன் இணைந்து நின்று காபூலில்
ஒரு அரசமைத்து ருஷ்யா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளுடன் தம்
இந்திய அரசை அங்கீகரிக்கப் பேச்சு நடத்திக் கொண்டிருந்தனர்..
"மஹ்மூத் ஹஸன் ஒரு உண்மையான தலைவர். ஒரு
தீர்க்கதரிசி.. இந்தியத் துணைக்கண்டத்து முஸ்லிம்களை அவர் கவர்ந்து
ஈர்த்திருந்தார். அவரை "இந்தியாவின் தலைவர்" (ஷைகுல் ஹிந்த்) என அவர்கள்
கொண்டாடினர். எவ்வளவு விரைவாக பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு விரட்ட
வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் விரட்ட வேண்டும் என அவர்கள் உணர்ந்திருந்தனர்."
- என எழுதுகிறார் நூலாசிரியர் சையத் உபைதூர் ரஹ்மான்.
மகாத்மா காந்தியால் முன்னெடுக்கப்பட்ட
காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டங்களிலும் முஸ்லிம்கள் முன்னின்றனர்.
கிட்டத்தட்ட 9 முஸ்லிம்கள் அக்காலகட்டத்தில் இந்திய தேசியக் காங்கிரசின்
தலைவர்களாக இருந்தனர். மௌலானா அபுல் கலாம் ஆசாத் நீண்ட காலம்
காங்கிரசுக்குத் தலைமை ஏற்றிருந்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற
Shaikhul Hind Maulana Mahmud al-Hasan, Maulana Barkatullah Bhopali,
Hakim Ajmal Khan, Maulana Ubaidullah Sindhi, Maulana Abul Kalam Azad,
Maulana Mohammad Ali Jauhar, Dr Maghfoor Ahmad Ajazi, Dr Mukhtar Ahmad
Ansari, Ashfaqulla Khan, Maulana Hasrat Mohani, Maulana Muhammad Mian
Mansoor Ansari, Asaf Ali, Husain Ahmad Madani, Aruna Asaf Ali (Kulsum
Zamani), Peer Ali Khan, Saifuddin Kitchlew, Mohammed Abdur Rahiman,
Captain Abbas Ali, Abdul Qaiyum Ansari, Prof. Abdul Bari, Moulvi Abdul
Rasul, Nawab Syed Mohammed Bahadur, Rahimtulla Mahomed Sayani, Syed
Hasan Imam, Sir Syed Ali Imam, Yusuf Meherally, Justice Fazal Ali,
General Shah Nawaz Khan, Allama Fazle Haq Khairabadi, Maulana Shaukat
Ali, Syed Mahmud, Maulana Mazharul Haque, Badruddin Tyabji, Col Mehboob
Ahmed, Begum Hazrat Mahal, Maulana Shafi Daudi, Rafi Ahmed Kidwai, Syed
Mohammad Sharfuddin Quadri, Batak Mian
முதலான சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட
முஸ்லிம்களைப் பற்றி விரிவாகப் பேசுறார் நூலாசிரியர்.. அவர்களைப் பற்றிய
சுருக்கமான குறிப்புகளை நம்முன் வைக்கிறார்.
வழக்கமான வட்டத்துக்குள் சிறைப்பட்டு
விடாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை
நுணுக்கமாகச் சொல்லும் நூல் இது. (நூல் குறித்து வந்துள்ள விமர்சனங்களின்
அடிப்படையில் எழுதப்பட்டது)
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை
No comments:
Post a Comment