Latest News

குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவோம்: காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ள ராகுல் நம்பிக்கை - கட்சியை பலப்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு முதல் முறையாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   -  படம்: பிடிஐ
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கான 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அகமதாபாத்தில் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி பற்றி தரக்குறைவாக பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி பிரதமர் மோடி விமர்சனம் செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. காங்கிரஸ் தலைவர் என்ற வகையில், கட்சியை பலப்படுத்த முன்னுரிமை கொடுப்பேன். இதை குஜராத் தேர்தலில் பார்க்கலாம்.

நான் கோயிலுக்கு செல்வது குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்புகின்றனர். நான் ஏன் கோயிலுக்கு செல்லக்கூடாது? அதுவும் தேர்தல் காரணமாக குஜராத்தில் உள்ள கோயிலுக்கு மட்டுமே நான் செல்வதாக பாஜகவினர் கூறுகின்றனர். அது தவறு. கேதார்நாத் கோயிலுக்கும் சென்றுள்ளேன். அது குஜராத்திலா உள்ளது? நான் கோயிலுக்கு போகும்போதெல்லாம் குஜராத் மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் மாநிலம் சிறப்பாக வளர்ச்சி பெற் வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறேன். 

குஜராத்தில் 90 சதவீத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தனியார் மயமாகிவிட்டன. புதிய வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்படவில்லை. பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் குஜராத் பின்தங்கி வருகிறது. வளர்ச்சி என்பது ஒருதரப்பினருக்கு மட்டுமே பயனளிப்பதாக உள்ளது. மேலும் ஊழல் பற்றியோ விவசாய விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றியோ பிரதமர் மோடி இப்போது பேசுவதில்லை. 

இந்த சூழ்நிலையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பாஜக ஆட்சியின் தவறுகள் சரி செய்யப்படும். அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சியின் பயனை அடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டப்படும். நிலையான ஊதியம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.