Latest News

ஆதார் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு

ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி தாக்கலான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (வியாழன்), உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், பல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், அதேசமயம் புதிய வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் தேவை எனவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்ககோரிய மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.