சிறுமிகளின் பிறப்புறுப்புகளை ஆபரேஷன் மூலம் சிதைத்ததாக கூறி, இந்திய
வம்சவாளி முஸ்லீம் பெண் டாக்டர் ஜுமனா நகர்வாலா என்பவரை அமெரிக்க போலீஸார்
கைது செய்துள்ளனர். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
44 வயதான ஜுமனா, அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த டாக்டர் ஆவார்.
இவர் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள லிவோனியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், 6
முதல் 8 வயதுக்குள்ள உள்ள சிறுமிகளுக்கு ஆபரேஷன் மூலம் பிறப்புறுப்புகளை
சிதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து ஜுமனா கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற புகாரில்
அமெரிக்காவில் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் அங்கு
பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கைதாகியுள்ள டாக்டர் ஜுமனா, தாவூதி போரா என்ற
இஸ்லாமிய மதப் பிரிவைச் சேர்ந்தவர்.
கடந்த 12 வருடங்களாக இதுபோன்ற சர்ச்சைக்குரிய ஆபரேஷனை ஜுமனா செய்து வருவதாக
கூறப்படுகிறது. தற்போது ஜுமனா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்குமாம்.
டாக்டர் ஜுமனா, குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட தாவூதி போரா
வகுப்பைச் சேந்தவர். தாவூதி போரா என்பது ஷியா முஸ்லீம் சமூகத்தின் ஒரு
பிரிவாகும். இந்த சமூகத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு
பிறப்புறுப்பில் இதுபோன்ற ஆபரேஷன் செய்யப்படும் பழக்கம் பின்பற்றப்பட்டு
வருகிறது. அதாவது சிறார்களுக்கு செய்யப்படும் "சுன்னத்" சடங்கு போலத்தான்
இதுவும். ஆனால் அமெரிக்க சட்டப்படி இது குற்றமாகும்.
இந்தியாவில் தாவூதி போரா சமூகத்தினர் இத்தகைய பெண் பிறப்புறுப்பு ஆபரேஷனை
எந்தவித தடையுமில்லாமல் செய்து வருகின்றனர். இங்கு அதற்கு எந்த சட்ட
ரீதியான தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment