500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து,
நடிகர் விஜய் 20 சதவீதம் பேர் செய்யும் தவறுகளுக்காக 80 சதவீதம் பேர்
பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஒன்இந்தியா தமிழ்
அரசியல் தலைவர்களிடம் பேசியது. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மூத்த தலைவர் தா.பாண்டியன் நடிகர் விஜய் சொன்னதில் தவறு இல்லை. ஆனால் அவர்
சொன்ன புள்ளி விவரம் சரியல்ல என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன்:
செல்லாத பணம் குறித்து நடிகர் விஜய் சொல்லியிருப்பது சரி. ஆனால் புள்ளி
விவரம் சரியல்ல. நடிகர் விஜய் சொன்னது போல் 20 சதவீதம் பேர் இந்த தவற்றை
செய்யவில்லை. இந்தியாவில் இந்த தவறை செய்பவர்கள் மிக மிகக் குறைவு. 10
விழுக்காட்டிற்கும் கீழ் இருப்பவர்கள்தான் இதனை செய்கிறார்கள். அதிலும்
மிகப் பெரிய பணத்தை கடத்துபவர்கள் ஐந்தே ஐந்து விழுக்காடுதான். அவர்கள்
யார் என்பது ஆட்சியாளர்களுக்கு கட்டாயம் தெரியும். தெரிந்திருந்தும்
அவர்கள் மீது பாயாமல், பொதுமக்களை காயவிடுகிறார்களே என்பது குறித்துதான்
விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் :
எழை எளிய மக்களுக்கு உதவி செய்ய நினைக்கும் நீங்கள் தயவு செய்து மக்களுக்கு
உதவுவதற்கு வாருங்கள். திரைத்துறையினர், அரசியல்வாதிகள் என அனைவருமே
தங்களுக்கு தேவையான பணத்தை வைத்துக் கொண்டு மீதிப் பணத்தை ஏழை எளிய
மக்களுக்கு அளிக்க வேண்டும். இதுநாள் வரை இது பணக்காரர்களுக்கான அரசு என்று
சொன்னவர்கள் இந்த அறிவிப்பிற்கு பின்னர் திகைத்து நிற்கின்றனர். ஏழை எளிய
மக்களின் வங்கிக் கணக்கில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது என்றால்
அதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.
விஜய்க்கு இன்னொரு வேண்டுகோளையும் இந்த நேரத்தில் வைக்கிறேன். இந்த மாதிரி
ஒரு அதிரடி திட்டத்தை, இந்தியாவை பொருளாதார அளவில் வல்லரசாகும் திட்டத்தை
பிரதமர் அறிவித்துள்ளார். விஜய் அவர்களே தமிழ்நாட்டில் அரசியல் களம்
சாதகமாகத்தான் இருக்கிறது. வாருங்கள்.. பாஜகவுடன் கைகோர்க்க வாருங்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் விஜய் பேச்சிற்கு
கருத்து சொல்ல விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்.


No comments:
Post a Comment