Latest News

காவிரி மேலாண்மை வாரியம் கோரி... தமிழகம் முழுவதும் ரயில் மறியல் .. திமுக, காங்., ம.ந.கூ. ஆதரவு!

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது. திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ந் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அக்டோபர் 3-ந் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று தெரிவித்தது. அதோடு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு... மேலும், காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றன. இது தொடர்பாக ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.


சம்பா சாகுபடி பாதிப்பு... தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் தற்போது 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறந்துவிடாததால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

அனைத்துக்கட்சிக் கூட்டம்... இந்நிலையில், கடந்த 6ம் தேதி சென்னையில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ரயில் மறியல் போராட்டம்... அதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் அக்டோபர் 17 (இன்று), 18-ந் தேதிகளில் (நாளை) தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகள் ஆதரவு... இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கையும் விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., தே.மு.தி.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தன.
200 இடங்களில்... அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என மொத்தம் 200 இடங்களில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து, 48 மணி நேரம் இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உஷார் நிலையில் போலீசார்... ஆனபோதும், பயணிகளுக்கு இடையூறு இன்றி ரயில் போக்குவரத்தை வழக்கம் போல் நடத்த ரயில்வே போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு... சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரயில் நிலையத்துக்கு வரும் போராட்டக்காரர்களை நுழைவு வாயிலிலேயே வைத்து கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.