Latest News

  

எனது தந்தையின் புகழை களங்கப்படுத்தவே அவதூறு.. போலீஸில் மு.க.அழகிரி புகார்

 
எனது தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றும், அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர கமி‌ஷனர் அலுவலகத்தில் அலுவலகத்தில் மு.க.அழகிரி புகார் மனு அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மு.க.அழகிரி சார்பில் அளித்துள்ள புகார் மனுவில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் வெளியான தகவல் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்த செய்திகளில் நான் கூறி இருப்பதாக ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. "தமிழக உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது என்பது தி.மு.க.வின் தோல்வி ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று நான் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் நான் சொன்னதாக வெளியான இந்த தகவல் பலராலும் பகிரப்பட்டுள்ளது. நான் அன்றைய தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தது போல அந்த செய்தி வெளியாகி உள்ளது. ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் அந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. உண்மையில் அன்றைய தினம் எந்த ஒரு பத்திரிகை நிருபரும் என்னை பேட்டி காணவில்லை. நானும் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை. தி.மு.க.வின் தோல்வி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று யாருக்கும் நான் பேட்டி அளிக்கவில்லை. நான் அப்படி பேசவே இல்லை.

சில சமூக விரோதிகள் வேண்டும் என்றே இந்த செய்தியை உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பரப்பி உள்ளனர். எனது குடும்பத்தினர் முன்னிலையிலும், என் கட்சிக்காரர்களிடமும் மற்றும் எனது ஆதரவாளர்களிடமும் எனக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி, என் புகழை இழிவுபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இந்த செய்தியை பரப்பி உள்ளனர். தி.மு.க.வுக்கு எதிராகவோ, தி.மு.க. தலைவர்களுக்கு எதிராகவோ அல்லது தி.மு.க. தொண்டர்களுக்கு எதிராகவோ நான் ஒரு கருத்தையும் வெளியிடவில்லை என்பதை மீண்டும் ஒரு தடவை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியதாக வெளியான செய்தி சிலரால் முன்பே திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனது அரசியல் வாழ்க்கையையும், என் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு பொய்யான அந்த செய்தியை சமூக வலைத் தளங்களில் பரப்பி உள்ளனர். எனக்கும் எனது தந்தையான கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள உறவு பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. எனக்கும், என் தந்தைக்கும் மோதல் ஏற்படுத்தவும், எங்கள் புகழை கெடுக்கவும் இப்படி பொய் செய்தியை பரப்பி உள்ளனர். எனவே தாங்கள் இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு விசாரித்து உண்மையான குற்றவாளிகளை சட்ட நடவடிக்கைக்கு கொண்டு வர வேண்டும். அந்த குற்றவாளிகள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 469, 499, 500, 501, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் இந்த பொய்யான தகவல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதில் எனக்கு நீதி கிடைக்கும். இவ்வாறு புகார் மனுவில் மு.க.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.