தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில்,
தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும்,
ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், பாஜக மூத்த
தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி, உள்துறை அமைச்சர்
ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வரின் முடிவற்ற மருத்துவமனை சிகிச்சையின் காரணமாக, தமிழகத்தில்
ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் குடியரசு தலைவர்
ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், ராமநாதபுரம்,
திருநெல்வேலி, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஐஎஸ்ஐஎஸ்
ஸ்லீப்பர் செல்கள் ஊருடுவியுள்ளனர். திராவிட கழகம், விடுதலை புலிகளில்
எஞ்சியவர்கள், நக்சல்கள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க
வாய்ப்புள்ளது.
ஆயுதப்படை சட்டம்
எனவே, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி, தமிழகத்தில் 6 மாதங்களுக்கு
குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும். சென்னை மற்றும் தென்
மாவட்டங்களில் Armed Forces (Special Powers) Acts எனும் ஆயுதப்படை சிறப்பு
சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான சட்டம்
ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்பது, ஏதோ 144 தடையுத்தரவு போல
அமல்படுத்தப்படுவது கிடையாது. மிகவும் ஆபத்தான சட்டம் அது. பொதுமக்கள்
கடும் கெடுபிடியை சந்தித்து அவதிக்குள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்
சட்டத்தை தமிழக மக்கள் மீது ஏவ சுப்பிரமணியன் சுவாமிக்கு என்ன அடிமனது
ஆசையோ தெரியவில்லை.
எப்போது பயன்படுத்தலாம்?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உள்ளூர் குழப்பங்களை உள்ளூர்
காவல்துறையால் நிர்வகிக்க முடியாது நிர்வாகம் சீர்குலைதல், மத்திய
பாதுகாப்புப் படைகள் மீண்டபிறகு அமைதி நிலை குலைதல், மாநிலத்திலுள்ள
அமைதியின்மையின் அளவு உள்ளூர் படைகளால் கையாளப்பட முடியாதிருத்தல் போன்ற
காரணங்கள் இருப்பின், ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்தலாம்.
ராணுவத்திற்கு வானளாவிய அதிகாரம்
இச்சட்டத்தின் மூலம் ஆயுதப்படையினருக்கு எவரையும் கைது செய்யவும் சோதனை
செய்யவும், குழப்பம் அதிகரித்தால், கண்டதும் சுடவும் அதிகாரங்கள்
வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பாதுகாப்புப்
படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை
வாரண்ட் இன்றி கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும்
அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் யாரையும் சோதனையிடவும் பொருட்களைக்
கைப்பற்றவும் முடியும். ஒரு ராணுவ வீரர் பொதுமக்கள் யாரையாவது தவறுதலாகவோ
தவிர்க்க முடியாமலோ சுட்டுக் கொன்றுவிட்டால், இந்தச் சட்டம் அவரைப்
பாதுகாக்கும்.
அமைதிப்படையை மறக்கலியே
இந்த சட்டத்தைதான் தமிழக மக்கள் மீது ஏவ வேண்டும் என்கிறார் சுப்பிரமணியன்
சுவாமி. இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படை நடத்திய கொடுமைகளை இன்னமும்
தமிழர்கள் மறக்காத நிலையில், மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில்,
இரோம் ஷர்மிளா போன்றோர், உயிரையும் துச்சமாக மதித்து போராடி,
விரட்டிவிடப்பட்ட அந்த சட்டத்தை தமிழகத்தில் ஏவி அடக்குமுறையை
கட்டவிழ்த்துவிடுவதில் அவருக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை.
உச்சநீதிமன்றம் கண்டித்த சட்டம்
உச்சநீதிமன்றம், கடந்த ஜூலையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ஆயுதப்படை
சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர்
வரம்பு மீறி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என கண்டித்துள்ளது. மேலும்,
போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சாமானியர்களில் இருந்து சுப்ரீம் கோர்ட்
வரையில் கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ள ஆயுதப்படை சிறப்பு
அதிகார சட்டத்தைதான் தமிழகத்தில் பிரயோகிக்க கோருகிறார் சுப்பிரமணியன்
சுவாமி.
தமிழகம் என்ன கர்நாடகாவா?
சமீபத்தில் காவிரி பிரச்சினைக்காக, பெங்களூரில் ஒரே நாளில் 97 வாகனங்கள்
தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தைவிடவா சமீபத்தில் ஒரு பெரிய கலவரத்தை நாடு
பார்த்திருக்கும்?, ஆனால் அதுபற்றி கூட வாய் திறக்காத சுப்பிரமணியன்
சுவாமியோ, அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் மணிப்பூரில்
அமல்படுத்தப்பட்ட சட்டத்தை பிரயோகிக்க கூறுவதன் நோக்கம் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட வேண்டியது.
வடக்கிலிருந்து வாங்களேன்..
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக சிலரை கைது செய்துவிட்டதற்காகவே
ஒரு அரசை கலைக்க வேண்டும் என்றோ, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை
பிரயோகிக்க வேண்டும் என்றாலோ, முதலில் அவற்றை மகாராஷ்டிரா, கர்நாடகா
மற்றும் பல வடக்கு மாநிலங்களில் செய்துவிட்டுதான் தமிழகத்திடம் வர
வேண்டியிருக்கும் என்பது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி படித்துள்ள
சுப்பிரமணியன் சுவாமிக்கு தெரியாமல் இருக்காதே!








No comments:
Post a Comment