சுவாதி கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று, சிறையில்
நேற்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும், ராம்குமார், கடந்த 10ம் தேதி
தமிழ் செய்தி டிவி தொலைக்காட்சி ஒன்றுக்கு கைப்பட எழுதிய கடிதம் தற்போது
வெளியாகியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டது முதலே, பல்வேறு
சந்தேகங்கள் நிலவி வந்தன. போலீசார் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை
வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனல், புழல் சிறையில் இருந்த
ராம்குமாரின் கருத்தை அறிய விரும்பி, அவரின் வழக்கறிஞர் ராம்ராஜ் மூலமாக
சில கேள்விகளை ராம்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளது.
வழக்கறிஞர் மூலம் கடிதம்
சிறைத்துறை அதிகாரி அனுமதி பெற்று இந்த கடிதம் ராம்குமாரிடம்
சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு ராம்குமார் கைப்பட பதிலையும் எழுதி வழக்கறிஞர்
மூலமாக டிவி சேனலுக்கு அனுப்பியுள்ளார். இது நடந்தது, கடந்த 10ம்
தேதியாம்.
முக்கிய அம்சம்
இந்த கடிதத்தில் ராம்குமார் வலியுறுத்திய முக்கிய அம்சம் என்பது, இந்த
வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மை குற்றவாளியை கைது செய்ய
வேண்டும் என்பதுதான்.
கழுத்தை அறுத்தது போலீஸ்
கடிதத்தில் ராம்குமார், பல்வேறு கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்களை இப்போது
பாருங்கள்: என்னை கைது செய்தபோது நான் தூங்கிக்கொண்டிருந்தனர். என்னை
எதுவும், பேச விடாமல் போலீசார் கழுத்தை அறுத்தனர் என்று நெல்லை
மாவட்டத்தில் தனது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவத்தை
விவரித்துள்ளார் ராம்குமார்.
நான் செய்யவில்லை
போலீசாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள, நீங்கள் கழுத்தை அறுத்ததாக
கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, "இல்லை, போலீசார்தான் கழுத்தை அறுத்தனர்"
என ராம்குமார் பதிலளித்துள்ளார்.
சுவாதியை தெரியாது
சுவாதியும், நீங்களும் நண்பர்களா என்ற கேள்விக்கு, சுவாதிக்கும் எனக்கும்
எந்த தொடர்பும் இல்லை. அவரை முன்பின் தெரியாது என்றுதான் ராம்குமார்
தெரிவித்துள்ளார்.
குடும்பத்தாருக்கு தெரியாது
சுவாதியை நீங்கள்ஒரு தலைபட்சமாக காதலித்தது உண்மையா என்ற கேள்விக்கு, அது
பொய் என்று ராம்குமார் பதிலளித்துள்ளார். சுவாதி குடும்பத்தாருக்கு உங்களை
தெரியுமா என்ற கேள்விக்கு, சுவாதி குடும்பத்தாருக்கு என்னை தெரியாது
என்றும் ராம்குமார் பதிலளித்துள்ளார்.
பின்தொடரவில்லை
நீங்கள் சுவாதியை பின்தொடர்ந்து சென்றதுண்டா என்ற கேள்விக்கு, இல்லை என
ராம்குமார் பதிலளித்துள்ளார். சுவாதியை ராம்குமார் காதலித்ததாகவும்,
பின்தொடர்ந்ததாகவும், காதலிக்க சுவாதி மறுத்ததால் கொலை செய்ததாகவும்
கூறப்படுவதையெல்லாம், பொய் எனவே கூறியுள்ளார் ராம்குமார்.
துப்பாக்கி முனையில் கைது
தனது சொந்த ஊரில், துப்பாக்கி முனையில் போலீசார் தன்னை கைது செய்தனர்
என்றும், சுவாதி என்ற அந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது எனவும்
ராம்குமார் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
யார் கொன்றிருப்பார்கள்?
சுவாதியை யார் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, "எனக்கு
தெரியாது" என ராம்குமார் பதிலளித்துள்ளார். நான் தனிமை சிறையில் உள்ளேன்.
எனது அறையிலிருந்து எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை எனவும் ஒரு துண்டு
சீட்டில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார்
ராம்குமார். இந்த நிலையில்தான், ராம்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார்.




No comments:
Post a Comment