பெங்களூருவில் கன்னட வெறியர்களால் தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்த கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசையும், பெங்களூரு காவல்துறையையும் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை விவரம்:
மொழி வெறி அமைப்பினர் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயம் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக தமிழ் இளைஞர் ஒருவர் பெங்களூருவில் கன்னட வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நாளில் இருந்தே, அங்கு தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை சில கன்னட மொழி வெறி அமைப்புகள் பரப்பி வருகின்றன. தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகளையும், சரக்குந்துகளையும் தாக்கிய கன்னட வெறியர்கள், அவற்றின் கண்ணாடிகளில், தமிழர்களே... காவிரி நீர் கேட்கிறீர்களா? உங்களுக்கு எங்களின் சிறுநீர் வேணுமா? என்று எழுதி தங்களின் கீழ்த்தரமான எண்ணத்தையும், நடத்தையையும் வெளிப்படுத்தினர்.
அமைதி காக்கும் தமிழகம்
பெங்களூரு, மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் நடத்தும் வணிக
நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், தமிழகமும்,
தமிழர்களும் அமைதி காத்து வந்தனர். அடுத்தகட்டமாக தமிழர்கள் மீதான நேரடித்
தாக்குதலை கன்னட வெறியர்கள் தொடங்கியுள்ளனர். பெங்களூரு கிரி நகரைச்
சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம்
நியாயம் இருக்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் உள்ள நடிகர் - நடிகைகள்
போராடாமல் இருப்பது குறித்தும், கர்நாடகத்தின் பக்கம் நியாயம் இல்லாத
நிலையிலும் கன்னட நடிகர் - நடிகைகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருவது
குறித்தும் அவரது முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.
கொடூரமாக தாக்கியுள்ளனர்
இதைப் பார்த்த கன்னட வெறியர்கள் கும்பலாகச் சென்று சந்தோஷை அவரது
வீட்டிலிருந்து கடத்தி வந்து பொது இடத்தில் வைத்து கொடூரமான முறையில்
தாக்கியுள்ளனர். அத்துடன் நிற்காமல் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து
தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்கும்படியும், கர்நாடகத்திற்கு ஆதரவாக
கருத்து தெரிவிக்கும்படியும் கட்டாயப்படுத்தி, அதன்படி அவர் மன்னிப்பு
கேட்கும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்தும் வெளியிட்டிருக்கின்றனர். அந்த
காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள்
மீது கர்நாடக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சகித்துக் கொண்டிருக்க முடியாது
காவிரி நீரை கோருவதும், பயன்படுத்துவதும் தமிழகத்தின் உரிமைகள் ஆகும்.
ஆனால், கர்நாடக அரசு தான் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் தடுத்து
வைத்திருக்கிறது. இச்சிக்கலுக்கு சட்டப்படியாக தீர்வு காண தமிழக அரசும்,
அறப்போராட்டங்களை நடத்தி அதன் மூலம் அரசியல் அழுத்தம் கொடுக்க தமிழக
அரசியல் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளும் முயன்று வருகின்றன.
இச்சிக்கலில் கர்நாடகம் போராட்டம் நடத்துவதற்கு எந்த தேவையுமில்லை;
நியாயமுமில்லை. ஆனாலும், கன்னட அமைப்புகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி
முழு அடைப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் நடந்த
போராட்டங்களின் போது கன்னடர்களின் உடமைக்கோ, உயிருக்கோ எந்த பாதிப்பும்
ஏற்படாத நிலையில், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களின் போது
தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதும்,
தமிழர்கள் தாக்கப்படுவதும் நியாயமற்றவை. மனித நேயத்திற்கும், மனித
உரிமைக்கும் எதிரான இச்செயல்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது.
சகோதர சகோதரிகளாக பழகி வருகிறோம்
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரிப் பிரச்சினை தவிர வேறு எந்த
மோதலும் கிடையாது. காவிரிப் பிரச்சினை தவிர்த்த மற்ற விஷயங்களில் இரு மாநில
மக்களும் சகோதர, சகோதரிகளாகவே பழகி வருகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒரு
மாநிலம் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டால், அடுத்த நிமிடமே இன்னொரு
மாநிலம் உதவிக் கரம் நீட்டுவது தான் இதற்கு உதாரணமாகும்.
நட்பை சிதைக்கும் வெறியர்கள்
இந்த நட்பை சிதைக்கும் வகையில் சில வெறியர்கள் நடத்தும் வன்முறைகளை கர்நாடக
அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கர்நாடகத்தில் தமிழர்கள் வாழ்வதைப்
போலவே, தமிழகத்திலும் கன்னட மக்கள் வாழ்கின்றனர். கர்நாடகத்தில்
தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் பட்சத்தில், தமிழர்களும்
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என எதிர் வன்முறையில் இறங்கினால் அது இரு
மாநிலங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை சிதைப்பதுடன், இந்தியாவின்
ஒற்றுமைக்கே ஊறு விளைவிக்கும் என்பதை கர்நாடக அரசும், வன்முறை
வெறியாட்டத்தில் ஈடுபடும் அமைப்புகளும் உணர வேண்டும்.
தமிழர்களைக் காக்காமல் உறங்கும் தமிழக அரசு
காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் பதற்றமும், வன்முறையும்
அதிகரித்துள்ள நிலையில், தமிழர்களை காப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தமிழக
அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல், கர்நாடகத்தில் நடைபெறும்
வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும்படி கர்நாடக அரசை எச்சரிக்க மத்திய அரசு
தயங்குகிறது. அதுமட்டுமின்றி, காவிரிப் பிரச்சினை குறித்து தம்மை
சந்தித்து பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் இப்பிரச்சினையில் தலையிட
தாம் விரும்பவில்லை என்று பிரதமர் மோடி கூறியதாக வெளியாகியுள்ள செய்திகள்
கவலையளிக்கின்றன. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் நடக்கும் வன்முறைகள்
குறித்தெல்லாம் கருத்து தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, காவிரி
சிக்கல் குறித்து கருத்து கூற மறுப்பது எந்தவகையான நடுநிலை எனத்
தெரியவில்லை.
நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் பிரதமர்
காவிரிப் பிரச்சினையில் கருத்துக் கூற மறுப்பது நடுநிலையல்ல; நியாயத்தின்
பக்கம் நிற்பது தான் நடுநிலை என்பதை பிரதமர் உணர வேண்டும். காவிரி நடுவர்
மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியத்தை அமைப்பது தான்
நீதியின் பக்கம் நிற்கும் செயல் என்பதால், அதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.
அத்துடன், தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்களை கைது செய்து நடவடிக்கை
எடுக்கும்படியும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு வலுத்த பாதுகாப்பு
வழங்கும்படியும் கர்நாடக அரசை மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து
வலியுறுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment