தண்ணீர் என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது அனைவருக்கும்
பொதுவானது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.உண்ணாவிரதம்
இருந்தால், உடல் நலம் மேலும் பாதிப்படையும். ஓய்வு எடுக்க வேண்டும் என்று
மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளதால், அவரால் இந்த உண்ணாவிரதத்தில்
கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காவிரி பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும்,
கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை
போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்-புதுச்சேரியில் இன்று காலை 6
மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க.,
தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை
சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு
அளித்துள்ளன.
இந்நிலையில், தே.மு.தி.க. சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள
தே.மு.தி.க. தலைமை அலுவலக வளாகத்தில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம்
தொடங்கியது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு
ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
தமிழக விவசாயிகள் பாதிப்பு
பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்,
கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்கள் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை
கர்நாடகா தராததால், வறட்சி ஏற்பட்டுள்ளது. சம்பா, குறுவை நெல் சாகுபடி
நடைபெறவில்லை, விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தண்ணீர் பொதுவானது
தண்ணீர் என்பது ஒருவருக்கு சொந்தமானது அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது.
காவிரி பிரச்னையில் எப்போது தீர்வு கிடைக்கும் என ஒவ்வொரு தமிழனும்
எதிர்பார்த்துள்ளான். இப்போதுகூட, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டிருக்காவிட்டால், கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டிருக்காது.
கர்நாடகாவில் தமிழர்கள் வன்முறை கும்பலால் தாக்கப்படுவதை வன்மையாக
கண்டிக்கிறோம்.
விஜயகாந்த் வராத காரணம்
கடந்த ஒரு சில நாட்களாக சேலம், ஆத்தூர் பகுதியில் விஜயகாந்த் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனால், அவரது உடல்
நலம் பாதிக்கப்பட்டது. வெளியில் உணவு சாப்பிட்டதால் வயிற்று கோளாறும்,
காய்ச்சலும் ஏற்பட்டது.
அவர் இன்று உண்ணாவிரதம் இருந்தால், உடல் நலம் மேலும் பாதிப்படையும். ஓய்வு
எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளதால், அவரால் இந்த
உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.
நதிகளை தேசியமாயமாக்குவோம்
கடந்த 114 ஆண்டுகளாக கர்நாடகம் - தமிழகம் இடையே காவிரி நதிநீர் பிரச்சினை
இருந்து வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வு காண நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.
தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கக் கூடிய
தலைவர் விஜயகாந்துதான். முதலில் இந்த உண்ணாவிரதப் போரட்டத்தை அறிவித்ததும்
அவர்தான்.
தமிழர் நலனின் அக்கறை
தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அறவழியில் இந்த
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும்
தே.மு.தி.க.வினர் உண்ணவிரதம் இருந்து வருகின்றனர். தமிழர்களின் ஒற்றுமையை
வெளிப்படுத்த கூடிய போராட்டம்தான் ஒட்டு மொத்த தமிழர்களின் நலனில் அவருக்கு
அக்கறை உண்டு என்றும் பிரேமலதா கூறினார்.
களையிழந்த உண்ணாவிரதம்
உண்ணாவிரதத்தில் மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், பார்த்தசாரதி, ஜாகீர்
உசேன், உமாராஜ், தினகர், செந்தாமரை கண்ணன், ஆனந்தன், தளபதி, சந்திரன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கறுப்பு சட்டை அணிந்தும் சில நிர்வாகிகள்
உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். ஆனால் கட்சியின் தலைவர் விஜயகாந்த்
பங்கேற்காததால் உண்ணாவிரதம் களையிழந்து காணப்படுகிறது.


No comments:
Post a Comment