Latest News

 
சம்பா சாகுபடிக்காக வரும் 20ம் தேதி முதல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையிலும், வட கிழக்கு பருவமழையை நம்பி இம்முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில், சம்பா சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, வரும் 20ம் தேதி முதல் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது, 84.76 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வினாடிக்கு 12,627 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா இன்று இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு உரிய நீரை வழங்கிட வேண்டும் என தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிலிகுண்டுலு நீரளவு நிலையத்தில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் கிடைக்கும் வகையில் கடந்த 5ம் தேதி முதல் 10 நாட்களுக்கு அதன் அணஐகளிலிருந்து நீரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணை வழங்கியது. அதன் பின்னர், கர்நாடக அறசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 12ம் தேதி முதல் 20ம் தேதிவரை நாளொன்றுக்கு 12 ஆயிரம் கன அடி நீரை விடுவிக்க வேண்டும் எனவும், இந்த ஆணை, வரும் 20ம் தேதிவரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் பில்லிகுண்டுலு நீரளவு நிலையத்தில் செப்டம்பர் 14ம் தேதிவரையில் 8.92 டிஎம்சி அடி நீர் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம், காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணையின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவை கணக்கிட்டு உத்தரவு வழங்கும்படி காவிரி மேற்பார்வை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் அணையில் செப்டம்பர் 16ம் தேதி நிலவரப்படி, 84.76 அடி நீர் உள்ளது. நீர்த் தேக்கங்களில் இருந்து உச்சநீதிமன்ற ஆணைகளின்படி, நீர் கிடைப்பதை எதிர்நோக்கியும், காவிரி மேற்பார்வை குழு நமக்குரிய நீரை கர்நாடகா வழங்கிட உத்தரவு வழங்கிடும் என்ற அடிப்படையிலும், இந்த வருடம் வட கிழக்கு பருவமழை, இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும், விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக செப்டம்பர் 20ம் தேதி முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.