Latest News

கோவையில் மருத்துவ மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை; பேராசிரியர் திட்டியது காரணமா...?


கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவி,  4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பேராசிரியர் திட்டியதாலேயே  அம்மாணவி மனமுடைந்து இந்த முடிவை தேடிக்கொண்டதாக கூறப்படுகிறது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வந்தவர் லட்சுமி (26). கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர்.

இன்று வகுப்புக்கு வந்த லட்சுமி, மருத்துவக் கல்லூரியின் 4 வது மாடியில் இருந்து திடீரென குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒருமணி நேரத்துக்கும் மேலாக மாணவி லட்சுமிக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி லட்சுமி உயிரிழந்தார்.

முன்னதாக இன்று காலை வகுப்பறையில்  மாணவி லட்சுமியை, பேராசிரியர் ஒருவர் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்தே அவர் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இது குறித்து பேட்டியளித்த துணை இருப்பிட மருத்துவ அலுவலர் ரகுபதி, ''மாணவி லட்சுமி 4 வது மாடியில் இருந்து குதித்ததாகவும் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவியை காப்பாற்ற முடியவில்லை'', எனவும் தெரிவித்தார். பேராசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவி மாடியில் இருந்து குதித்ததாக வெளியான தகவல் குறித்து பதில் அளிக்க மறுத்து விட்டார்.

மாணவியின் தற்கொலை தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் விசாரணை மேற்கொண்ட பீளமேடு காவல் துறையினர் மாணவியின் உடைமைகளை சோதனையிட்டனர். பின்னர் மாணவியின் அப்பா நரேந்திரன் ,அம்மா சுதா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி லட்சுமி சமீபகாலமாக சரியாக படிக்காமல் இருந்து வந்ததாகவும் கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது. மருத்துவமாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.