Latest News

  

ஓசூரில் கொள்ளையர்கள் தாக்கி பலியான ஏட்டு குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி: ஜெ. வழங்கினார்


ஓசூரில் கொள்ளையர்களால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார்.

கடந்த 15.6.2016 அன்று நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவம் தொடர்பாக, ஓசூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை பிடிக்க முற்படும் போது, அவர்கள் கத்தியால் தாக்கியதில் ஓசூர் காவல் நிலைய தலைமைக் காவலர் முனுசாமி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட 16.6.2016 அன்று உத்தரவிட்டிருந்தார்.
20.6.2016 அன்று சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, முனுசாமியின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், முனுசாமியின் மகள் செல்வி ரக்ஷனாவின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.

அதன்படி, உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி முனிலட்சுமியிடம் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும், எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டப் படிப்பிற்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ரக்ஷனாவின் மருத்துவக் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு வெளியிட்ட அரசாணையினை ரக்ஷனாவிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

முதல்வரிடம் இருந்து 1 கோடி ரூபாய்க்கான நிவாரண உதவித் தொகையை பெற்றுக் கொண்ட தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்தினர், நிவாரண உதவித் தொகை வழங்கியமைக்காகவும், மகளின் மருத்துவக் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளதற்காகவும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.