Latest News

காணொளி ஆட்சி தற்போது ஸ்டிக்கர் ஆட்சியாகிவிட்டது... அதிமுக அரசு குறித்து கனிமொழி விமர்சனம்


தமிழகத்தில் காணொளி காட்சி ஆட்சியாக இருந்த அதிமுக அரசு தற்போது ஸ்டிக்கர் ஆட்சியாக மாறிவிட்டது என திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி விமர்சித்துள்ளார். சட்டசபைத் தேர்தலையொட்டி கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் தர்மபுரி மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் திமுக மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மீனாட்சி மகால் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஏமாற்றுவேலை... கடந்த 5 ஆண்டு காலமாக மதுவிலக்கை அமல்படுத்தாத ஜெயலலிதா, தற்போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்.

மதுவிற்கு எதிரான நடவடிக்கைகள்... மதுவிற்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள், பெண்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இசை கலைஞர் கோவன் என்பவர் மதுவிற்கு எதிராக பாடல் பாடியதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் ஈடுபட்டபோது உயிரிழந்தார். இதுபோன்று மதுவிற்கு எதிராக போராடியவர்கள் மீது அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள்.

110 விதி... ஜெயலலிதா சொன்ன எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றியதில்லை. சட்டசபையில் 110 விதியை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை வெளியிட்ட ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். இதில் ஒன்று, இரண்டை தவிர மற்ற எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

செய்வதைத் தான் சொல்வார்... ஆனால், திமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றுவதாக அறிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கு, விவசாயிகளுக்கு என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் செய்வதைத்தான் சொல்வார். சொல்வதைத்தான் செய்வார். திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை மக்கள் தயாரித்த தேர்தல் அறிக்கையாகும்.

தேர்தல் அறிக்கை... எப்படி என்றால் நாங்கள் மாவட்டந்தோறும் சென்று அங்கு விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தொழில் அதிபர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து, அவர்கள் கூறியதை உள்வாங்கி, வெளியிடப்பட்டதுதான் இந்த தேர்தல் அறிக்கையாகும். தமிழகத்தில் இரு சமூக மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் சாதி கட்சிகள் உள்ளன. அதனால், சாதி கட்சியினரை நம்பாதீர்கள்.

ஸ்டிக்கர் ஆட்சி... தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. காணொளி ஆட்சியாக இருந்த அ.தி.மு.க. ஆட்சி, பின்னர் ஸ்டிக்கர் ஆட்சியாக மாறிவிட்டது. வரும் தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று, தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அதற்கு உறுதுணையாக தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி தூண்களாக இருந்தது என்ற பெருமை பெரும் வகையில் நாம் பணியாற்றிட வேண்டும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.