சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கும் அப்பீல் மனு மீதான விசாரணையில் நாளையுடன் ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைகிறது. ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்தனர். சொத்து குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமியும் தமது இறுதி வாதத்தை முன்வைத்தார். அன்பழகன் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது இறுதிவாதங்களை முன்வைத்து வருகிறார். ஜெயலலிதாவின் சொத்துகள் மிகையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன என அவர் தமது வாதத்தில் சுட்டிக்காட்டினார். இன்றும் நாகேஸ்வரராவ் தமது வாதங்களைத் தொடர்ந்தார். அவர் நாளை தம்முடைய வாதத்தை நிறைவு செய்வதாக நீதிபதிகளிடம் கூறினார். இந்த வாதங்களைத் தொடர்ந்து கர்நாடகா அரசு தரப்பு ஓரிரு நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்யும். அதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment