Latest News

  

7வது படித்த திருப்பூர் மேயர் விசாலாட்சி.. பி.ஏ. வானது எப்படி?: கலெக்டர் விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு


பி.ஏன்னா பெனாங்கு அண்ணாமலை, எம்.ஏன்னா மலேசியா அண்ணாமலை என்று பகீர் விளக்கம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி. இவரது பி.ஏ., பட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், பி.ஏ. படித்ததாக பொய் சொல்லி வேட்பாளரானதாகவும் இவர் மீது திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பா.சு.மணிவண்ணன் என்பவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் புகார் மனு ஒன்றை எழுதி இருந்தார். அதில், "திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பி.ஏ. படித்ததாக தங்களிடம் பொய் சொல்லி மேயர் வேட்பாளரானார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்கு கேட்ட அனைத்து விளம்பரங்களிலும் பி.ஏ. என்றுதான் குறிப்பிட்டார். மேயரான பின்னர் அனைத்து மாநகராட்சி பதிவுகளிலும் பி.ஏ. என்றுதான் குறிப்பிட்டார். விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு ஆகியவற்றிலும் பி.ஏ. என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், தனது வேட்பு மனுவில் திருப்பூர் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு வரை படித்ததாக தெரிவித்திருக்கிறார். எனவே, அம்மாவை ஏமாற்றி பொய் சொல்லி வேட்பாளராகி வெற்றி பெற்றுள்ள மேயர் விசாலாட்சியின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரியும், அவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் கட்சித்தலைமை எடுக்கவில்லை.

தேர்தல் ஆணையத்திடம் புகார் மேயர் விசாலாட்சி. பி.ஏ. படித்துள்ளதாக வேட்புமனுவில் பொய்யாக குறிப்பிட்டுள்ளதாக மணிவண்ணன் என்பவர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு புகார் செய்தார்.ஹைகோர்ட்டில் வழக்கு இந்த புகார் மீது விசாரணை நடத்தும்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், மாவட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை ஹைகோர்ட்டில் மணிவண்ணன் வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி விசாரணை இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கை விசாரிக்க மறுத்து, தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.ஆட்சியருக்கு உத்தரவு மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரர் புகார் கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை மாவட்ட ஆட்சியர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படை யில், தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளனர்.

பொய் சர்டிபிகேட் டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ள அமைச்சரவையில் போலி சர்ட்டிபிகேட் கொடுத்து அமைச்சரானவர் பதவி இழந்து சிறை சென்ற சம்பவம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நம் தமிழ்நாட்டிலோ அரசியல் தலைவர்கள் பலரும் அசால்டாக பி.ஏ., எம்.ஏ., என்று பதவியை போட்டு வருகின்றனர். அனைவரும் உண்மையாகவே டிகிரி படித்தவர்கள்தானா என்று விசாரித்தால் எத்தனை பேர் சிக்குவார்களோ?

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.